இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: காஷ்மீரில் 3வது நாளாக பதற்றம்
10/6/2025 2:46:10 PM
நகர்: காஷ்மீரில் எல்லையில் 3வது நாளாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இன்றோடு இப்பகுதியில் 3வது நாளாக பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி இந்திய நிலைகள் மீதும், எல்லையோர கிராமங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பூஞ்சில் உள்ள திக்வார் செக்டாரில் நள்ளிரவு தொடங்கி இன்று காலை வரை இந்த தாக்குதல் நீடித்தது. கடந்த சில மணி நேரங்களுக்கு உள்ளேயே இந்த பகுதியில் மட்டும் இன்று அதிகாலைக்குள் பாகிஸ்தான் படையினர் இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் சண்டை நீடித்தது. ஆனால் இந்த தாக்குதலில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே கடந்த புதன் கிழமை எல்லையோர கிராமத்தை நோக்கி பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். நல்வாய்ப்பாக இதில் கிராமவாசிகள் யாருக்கும் எந்த காயமும் இன்றி தப்பினர். அதே நேரத்தில் கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாகவே எல்லை பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல் காரணமாக பதற்றம் நிலவி வருகிறது.