தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றார்: முதல்வர், எதிர்கட்சி தலைவர் நேரில் வாழ்த்து
10/6/2025 2:45:09 PM
சென்னை: தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் இன்று காலை சென்னை கிண்டி ராஜ்பவனில் பதவி ஏற்றார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கவர்னருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழகத்துக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக முழு நேர கவர்னர் நியமிக்கப்படாமல் இருந்தது. மகாராஷ்டிரா மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வகித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் அரசியல் மாற்றத்தை கருத்தில் கொண்டு உடனடியாக முழு நேர கவர்னரை நியமிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இருப்பினும் மத்திய அரசு காலம் தாழ்த்தியது. இந்த சூழலில், தமிழகத்தின் நிரந்தர கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்படுவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 30ம் தேதி அறிவித்தார். இதையடுத்து பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், நேற்று காலை தமிழகத்தில் இருந்து விடைபெற்றார். விமானநிலையத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் அவரை வழி அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இந்த நிலையில், புதிய கவர்னர் பதவியேற்பு விழா சென்னை கிண்டி ராஜ்பவனில் இன்று காலை நடந்தது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் தன் மனைவியுடன் விழாவில் கலந்து கொண்டார். காலை 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், காமராஜ், சரோஜா, ராஜேந்திர பாலாஜி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சரியாக காலை 9.28 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, புதிய கவர்னருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் உறுதி மொழி வாசித்து பொறுப்பேற்றுக்கொண்டார். அதைதொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜ எம்பி இல.கணேசன் ஆகியோர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு மலர் கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வாழ்த்துகள் தெரிவித்தனர். அதேபோல், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் புதிய கவர்னருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விழா துளிகள்: ஓராண்டுக்குப் பின் நிரந்தர கவர்னர்: தமிழகத்தின் முழு நேர கவர்னராக இருந்த ரோசய்யா கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார். இதையடுத்து, மும்பை கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பகுதி நேர கவர்னராக கடந்த ஆண்டு செப்.2ம் தேதி நியமிக்கப்பட்டார். கடந்த ஓராண்டாக புதிய முழு நேர கவர்னர் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது நிரந்தர கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
அமைச்சர்கள் அறிமுகம்: பதவி ஏற்பு முடிந்ததும் தமிழக அமைச்சர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒவ்வொரு அமைச்சர்களும் தனித்தனியாக மேடைக்கு வந்து கவர்னருடன் கைகுலுக்கி அறிமுகம் செய்து கொண்டனர். நீதிபதிகள் வாழ்த்து: விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர். அவர்களை மேடைக்கு அழைத்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி புதிய கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒவ்வொருவரும் தனித்தனியாக கவர்னருடன் கைகுலுக்கி கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வாழ்த்து: விழாவுக்கு வந்திருந்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய கவர்னருக்கு மலர் கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அப்போது, பொன்முடி, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் உடன் இருந்தனர். அவர்களை கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். பாஜ நிர்வாகிகள் சங்கமம்: புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாஜ கட்சியை சேர்ந்தவர் என்பதால் பதவி ஏற்பு விழாவுக்கு தமிழக பாஜ நிர்வாகிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களை மேடைக்கு அழைத்த தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கவர்னருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டப்படி முடிவுகள் எடுப்பேன்: புதிய கவர்னர் பேட்டி
தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் இன்று பதவியேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டு என் பணியை மேற்கொள்வேன். அரசியல் அமைப்பு சட்டத்துக்குட்பட்டு என் முடிவுகளை எடுப்பேன். வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வேன். அரசியல் ரீதியாக என்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பது தான் எனது முதல் பணி. இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார். தமிழகத்தில் தற்போது அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் அதிமுக தினகரன் அணி எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதுதொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு முடிவுக்குப் பின், கவர்னர் எடுக்கின்ற நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அந்த சந்தர்ப்பத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், சட்டத்துக்குட்பட்டு முடிவுகள் எடுப்பேன் என புதிய கவர்னர் பேட்டி கொடுத்துள்ளதால், தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்தில் வித்தியாசமான முடிவுகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.