தமிழக பொறுப்பு கவர்னர் இன்று விடைபெற்றார் : புதிய கவர்னர் நாளை பதவியேற்பு
10/5/2025 3:51:11 PM
சென்னை தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று காலை விடைபெற்று சென்றார். அவரை முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர். புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அவர் நாளை காலை பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். தமிழக கவர்னராக இருந்த ரோசைய்யாவின் பதவி காலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 30ம் தேதி முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மராட்டிய மாநில கவர்னராக பணியாற்றி வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு கூடுதல் பொறுப்பு கவர்னராக கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி நியமிக்கப்பட்டார். மராட்டியம் மற்றும் தமிழகம் என இரண்டு மாநில கவர்னர் பொறுப்புகளையும் வித்யாசாகர் ராவ் கவனித்து வந்ததால், பணி சுமை அதிகரித்தது. மேலும், தமிழகத்தில் கடந்த சில மாதமாக நடைபெற்று வரும் அரசியல் நெருக்கடிகளை, தமிழகத்தில் இருந்து கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், தமிழகத்துக்கு தனியாக கவர்னர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு முழுநேர கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 30ம் தேதி அறிவித்தார். தமிழகத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று காலை சென்னையில் இருந்து விடை பெற்றார். இன்று காலை 8.25 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இருந்து காரில் புறப்பட்ட வித்யாசாகர் ராவ் காலை 8.40 மணிக்கு விமான நிலையம் வந்தார். அப்போது, அங்கு தயாராக இருந்து போலீசார் அவருக்கு பேன்ட்வாத்தியம் முழுங்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர். தமிழக போலீஸ் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், அன்பழகன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் மற்றும் ராஜ்பவன் உயர் அதிகாரிகள் மலர்க்கொத்து மற்றும் சால்வை அணிவித்து தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை வழியனுப்பி வைத்தனர். இதையடுத்து சரியாக இன்று காைல 9.15 மணிக்கு தனி விமானம் மூலம் வித்யாசாகர் ராவ் மும்பை புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி வினோதா ராவும் உடன் சென்றார். முன்னதாக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று தமிழக மக்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பொறுப்பு கவர்னர் தமிழகத்தில் இருந்து விடைபெற்று சென்றதை தொடர்ந்து, தமிழகத்தின் புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பயணிகள் விமானம் மூலம் சென்னை வருகிறார். அவரை முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றார்கள். பின்னர் கார் மூலம் சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவன் சென்றார். இதைத்தொடர்ந்து நாளை காலை 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் அவர் புதிய தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ், கவர்னர் மாளிகையில் ஒவ்வையார் சிலை, திருவள்ளுவர் சிலை புதிதாக அமைத்து திறந்து வைத்தார். மேலும், கவர்னர் மாளிகையை பொதுமக்கள் சென்று பார்க்கவும் ஏற்பாடு செய்ததுடன், மரம், பூச்செடிகள் வைத்து பொதுமக்களின் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தனி விமானத்தில் பொறுப்பு கவர்னர் : பயணிகள் விமானத்தில் புதிய கவர்னர்
தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக வித்யாசாகர் ராவ் கடந்த செப்டம்பர் 2ம் தேதி நியமிக்கப்பட்டார். மும்பை கவர்னராவும் இவர் செயல்பட்டதால், பெரும்பாலான நாட்கள் மும்பையில் தான் இருந்தார். சென்னை வருவது என்றால், தனி விமானம் மூலமே வித்யாசாகர் ராவ் வந்து, சென்றார். தமிழகத்தில் இருந்து இன்று விடை பெற்று சென்றபோது கூட தனி விமானத்தில் தான் சென்றார். ஆனால், தமிழகத்தின் புதிய கவர்னராக பொறுப்பு ஏற்க உள்ள பன்வாரிலால் புரோகித் இன்று பிற்பகல் சென்னை வந்தபோது, பயணிகள் விமானத்தில் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.