திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பலி : 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி
10/5/2025 3:41:53 PM
சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஓய்வு பெற்ற எஸ்.ஐ. உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை அடுத்த பூந்தமல்லி சேஷா நகரை சேர்ந்தவர் பழனி (36). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நளினி (34). இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக நளினி காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நளினி நேற்றிரவு உயிரிழந்தார்.
இதுபோல் 2 நாட்களுக்கு முன்பு குமணன்சாவடி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஷரீன் பானு (20) என்பவர் உயிரிழந்தார். மேலும் சில நாட்களுக்கு முன்பு கருணா கரன்நகர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் சாம் மர்ம காய்ச்சலால் உயிரிழந்தான். மேலும் பூந்தமல்லி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் சுகாதார கேட்டினால் தொற்று நோய், டெங்கு, மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் சாக்கடை நீர் தேங்கியும், குப்பை அள்ளப்படாமலும் கிடக்கின்றன. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எங்காவது உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டும் அப்பகுதிக்கு வந்து பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து தெளிக்கின்றனர்.
தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாக்கடை நீருடன் மழை நீரும் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கிறது. கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற முறையான கால்வாய் வசதி இல்லை. இதனால் ஏற்படும் சுகாதாரக்கேடால் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. ஆனால் நகராட்சி நிர்வாகமோ எந்த ஒரு நடவடிக்கையும் முறையாக எடுக்காமல் அலட்சிய போக்குடன் செயல்படுவது பொதுமக்களிடையே வெறுப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி யுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே பட்டமந்திரி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (40). இவரது மனைவி மஞ்சுளா(36). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக மஞ்சுளாவுக்கு மர்ம காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவர் மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கிருந்து திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார்.
பொன்னேரி அடுத்த பழவேற்காடு, வைரவன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம் (42). இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன் விட்டுவிட்டு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக பழவேற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக நாகலிங்கம் இறந்தார். மர்ம காய்ச்சலுக்கு இரண்டு பேர் பலியானதால் பொன்னேரி, மீஞ்சூர் பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் நடராஜன்ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் .கடந்த 10 நாட்களுக்கு மேலாக டெங்கு காய்ச்சல் காரணமாக அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் திருப்புட்குழி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறதோ என பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த செருக்கனூர் கிராமத்தில் வசிப்பவர் யசோதா (80), காந்தி ரோடு முதல் தெருவில் வசிப்பவர் யுவராணி (45), ஜெஜெ.ரவி நகரை சேர்ந்த ஸ்ரீராம் மகன் மோகித் (4). இவர்கள் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இவர்கள் 3 பேரையும் கடந்த 2 நாட்களுக்கு முன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் மர்ம காய்ச்சல் குறையவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து யசோதா, யுவராணி, மோகித் ஆகியோரை மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே மர்ம காய்ச்சல் பாதிப்பு பற்றி அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பிரபாகரன் மேற்பார்வையில், வீரக்குப்பம் வட்டார மருத்துவ அலுவலர் சரண் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று செருக்கனூர் கிராமத்துக்கு சென்றனர். திருத்தணி நகராட்சி ஆணையர் முருகேசன் தலைமையில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் நேற்று திருத்தணி நகரம் மற்றும் செருக்கனூர் கிராமத்தில் துப்புரவு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். சிறுவன் உள்பட 3 பேருக்கு மர்ம காய்ச்சல் பாதித்துள்ளதால் திருத்தணி பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.