டெங்கு பாதிப்பு குறித்து கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
10/5/2025 3:32:31 PM
சென்னை: கொளத்தூர் தொகுதியில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஏராளமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். திமுக செயல்தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி ஆய்வு செய்து வருகிறார்கள். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே ஸ்டான்லி மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் ஆய்வு செய்தார். இன்று அவர் கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மருந்துகள் தாராளமாக கிடைக்கிறதா என்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். காலை 9.30 மணிக்கு செம்பியம் வந்த அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை வார்டு வார்டாக சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பெண்கள், முதியோர், சிறுவர், சிறுமியர் ஆகியோர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் பந்தர் கார்டன் பகுதிக்கு சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேரும், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அகரம் சோலையராஜா தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதை தொடர்ந்து ஜி.கே.எம் காலனி 34 வது தெருவில் உயர் அழுத்த மின் கம்பிகள் புதைவடகம்பிகளாக மாற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ரங்கநாதன் எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப் முரளி, நாகராஜ் ஆகியோர் இருந்தனர்.