வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது : நகை, செல்போன் பறிமுதல்
10/5/2025 3:30:21 PM
பல்லாவரம்: சென்னை பம்மல், பொழிச்சலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செல்போன் மற்றும் செயின் பறிப்பு மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி கொள்ளைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிமூலத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அனகாபுத்தூர் ஆற்றுப்பாலம் அருகே பல்லாவரம்-குன்றத்தூர் செல்லும் சாலையில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு பைக்கில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் பைக்கை போட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் வந்தது திருட்டு பைக் என்பதும் போலீசாரின் கேள்விகளுக்கு பதற்றத்துடனும் முன்னுக்கு பின் முரணாகப் பதில் கூறியதால் காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். பிடிபட்ட நபர்கள் பம்மல், பொழிச்சலூரை சேர்ந்த லட்சுமணன் (23), சத்யா(21), சீனிவாசன் (25) என்பதும் இவர்கள் வழிப்பறி கொள்ளை, செயின் பறிப்பு மற்றும் பைக் திருட்டையே தொழிலாக கொண்டிருப்பது தெரியவந்தது. பம்மல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியே நடந்து செல்லும் வயதான மற்றும் இளம்பெண்களிடம் செல்போன் மற்றும் செயின் பறிப்பு, இருசக்கர வாகன ஓட்டிகளை வழிமறித்து தாக்கி பணம் மற்றும் பைக் திருட்டு ஆகியவற்றை செய்ததாகவும், இதுதொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த 4 சவரன் தங்க நகைகள், 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.