கோவையில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் அருங்காட்சியகம் அடுத்த மாதம் திறப்பு
9/18/2017 3:54:07 PM
கோவை : கோவை ரயில்நிலையம் எதிரில் ‘ஹேமில்டன் கிளப்’ என்ற பெயரில் போலீஸ் அருங்காட்சியகம் உள்ளது. பாழடைந்த நிலையிலிருந்த இக்கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு, ஆங்கிலேயர் மற்றும் தமிழக போலீசார் பயன்படுத்திய பழங்கால மற்றும் நவீன கால சீருடைகள், ஆயுதங்கள், துப்பாக்கிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடலோர காவல்படையினர் பயன்படுத்திய படகு, பழைய ராணுவ டாங்கி, ஆங்கிலேயர் காலத்திலிருந்து தற்போது வரை போலீசார் பயன்படுத்திய தொப்பி, பீரங்கிகள், போலீசாரின் சீருடைகள், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பயன்படுத்திய ஆடைகள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 8 அடி நீளம் 20 கிலோ எடையுள்ள பிரமாண்ட துப்பாக்கி ஒன்றும் இந்த அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போல் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய நீர் மூழ்கி கப்பல், 1959ல் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் சிக்கிய இயந்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இடம் பிடித்துள்ளன. மேலும் பல்வேறு அரிய பொருட்கள் வைக்கப்பட்டு இந்த அருங்காட்சியகம் வரும் அக்டோபர் மாதத்தில் திறக்கப்பட உள்ளது.