சொகுசு கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்
9/18/2017 3:53:21 PM
சென்னை : சொகுசு கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று காலை நேரில் ஆஜரானார்.
முன்னாள் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென் கடந்த 2005ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லேண்ட் க்ரூஸர் காரை ரூ. 55 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். ஆனால் அந்த கார் 2004ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என சென்னை துறைமுகத்தில் கணக்கு காட்டி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதையும் மேலும் அதில் வரி ஏய்ப்பு செய்திருப்பதையும் சுங்க இலாகா துறையினர் கண்டு பிடித்தனர். இதுதொடர்பாக காரை விற்பனை செய்த மும்பையைச் சேர்ந்த ஹரன் மற்றும் வாசு பண்டாரி தமலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் ஏற்கனவே இந்த காருக்கான 20.31 லட்ச ரூபாய் வரியை சுஷ்மிதா சென் செலுத்தியுள்ளார். மேலும் சுங்க இலாகா துறையினர் சாட்சியாக ஏற்கனவே எழும்பூர் நீதிமன்றத்தில் சுஷ்மிதா சென் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது வரி செலுத்தியதற்கான ஆவனங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த நேரில் ஆஜராக பலமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சுஷ்மிதா சென் நேரில் ஆஜராகவில்லை. அதனால் கடந்த விசாரனையின் போது சுஷ்மிதா சென்னுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சொகுசு காருக்கான வரிசெலுத்தி விட்டதால், நேரில் ஆஜராக பிறப்பித்த வாரண்ட்டுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கில் இருந்து தன்னை நீக்க வேண்டும் எனவும் நடிகை சுஷ்மிதா சென் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சுஷ்மிதா சென் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வழக்கில் ஆஜராக நடிகை சுஷ்மிதா இன்று காலை 10.15 மணிக்கு எழும்பூர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்தார். அவரை பார்க்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். அவர்கள், கூட்டத்துக்குள் சிக்கிய நடிகை சுஷ்மிதாதாவை நீதிமன்றத்துக்குள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். நீதிபதி 10.30 மணி அளவில் நீதிமன்றத்துக்குள் வந்தார். அதுவரை நடிகை சுஷ்மிதா சென் அங்கேயே காத்திருந்தார். தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.