தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை திடீர் ரத்து : நம்பிக்கை வாக்கெடுப்பு மேலும் தாமதம் ஆகலாம்
9/18/2017 3:52:07 PM
சென்னை : தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வர இருந்தது திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டப்பேரவையை கூட்டுவது மேலும் தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவாக 134 அதிமுக எம்எல்ஏக்கள் செயல்பட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் 19 அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த மாதம் 22ம் தேதி தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை பார்த்து, முதல்வர் எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக கூறினர். இதைத்தொடர்ந்து மேலும் 2 எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக திரும்பினர். தற்போது, இந்த 21 எம்எல்ஏக்களும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு 113 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தற்போது உள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிட்டவர்கள் தமிழக கவர்னரை நேரில் சந்தித்து, எடப்பாடி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதால் உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், தமிழக கவர்னர் சட்டப்பேரவையை கூட்டாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இதனால் திமுக சார்பில் சட்டப்பேரவையை கூட்ட தமிழக கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வரும்போது, சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பான விவரத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணை 20ம் தேதிக்கு (நாளை) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மும்பையில் இருந்து தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று காலை சென்னை திரும்புவார் என்றும், அப்போது சட்டப்பேரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளில் ஈடுபடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தமிழக கவர்னர் இன்று சென்னை திரும்புவது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் தான் கவர்னர் சென்னை வருவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வராதது ஏன் என்பது குறித்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:
திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 20ம் தேதி வரை சட்டப்பேரவையை கூட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த வழக்கில் கிடைக்கும் தீர்ப்பை பொறுத்துதான் தமிழக ஆளுநர் வருகை இருக்கும். அதே போன்று, டெல்லியில் உள்ள உள்துறை உத்தரவுபடி தான் தமிழக கவர்னர் செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவைைய கூட்டுவது தொடர்பான எந்த உத்தரவும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கவர்னருக்கு கிடைக்கவில்லை. இதுபோன்ற பிரச்னைகளால்தான் கவர்னர் சென்னை வருவது காலதாமதம் ஆகிறது.