உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் : ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல்
9/18/2017 3:44:34 PM
சென்னை : உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் இன்று மனு தாக்கல் செய்தது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, அக்டோபர் மாதம் 17, 19 தேதிகளில் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்தலில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு போட்டியிட போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை. எனவே, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
திமுக சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன், வக்கீல்கள் கிரிராஜன், நீலகண்டன் ஆகியோர் ஆஜராகினர். மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில் மூத்த வக்கீல் என்.எல்.ராஜா, இடை மனுதாரர் பழனிமுத்து, அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் பி.குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் கடந்த 4ம் தேதி தீர்ப்பளித்தது.தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தேர்தலை நடத்துவதில் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்தலை நடத்த கால தாமதம் ஏற்படுவதற்காக தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்க முடியாது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 9 கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது அவர்கள் தொடர்பான அனைத்து தவறுகளையும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். எனவே குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது அவர்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடுவதில் எந்த தவறும் இல்லை. அதன் நகல் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கட்டணம் செலுத்தி பெறும் வகையில் வைக்கப்பட வேண்டும்.
வறட்சியைக் காட்டி தேர்தலை தள்ளிவைக்கும் அதே நேரத்தில் அரசு விழாக்களும், அரசு நிகழ்ச்சிகளும் நிர்ணயிக்கப்பட்ட நாளில் எப்படி நடத்த முடிகிறது? உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருந்த போதிலும் இந்த நீதிமன்றத்துக்குள்ள அதிகாரத்தையும், அரசியலமைப்பு சட்ட பிரிவு 226ல் தரப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வேண்டியுள்ளது.
எனவே, தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பர் 18ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். நவம்பர் 17ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இந்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை இன்று வெளியிட வேண்டும். ஆனால் அதற்கான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் தேர்தல் அறிவிப்புக்கு கால அவகாசம் கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில்,‘‘உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு முன்பு வார்டு வரையறை(எல்லை தொடர்பான பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தேர்தல் அறிவிப்பை வெளியிடுவது சட்டச்சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, உச்சநீதிமன்றத்தில் வார்டு வரையறை தொடர்பான வழக்கு முடியும் வரை உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கவோ, நடத்தவோ முடியாது. எனவே தேர்தல் தேதி அறிவிப்புக்கும், தேர்தலை நடத்துவதற்கும் கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.