டிடிவி.தினகரனுக்கு சிறை எடப்பாடி எச்சரிக்கை
9/16/2017 3:04:52 PM
சென்னை: டிடிவி.தினகரன் விரைவில் மாமியார் வீட்டிற்கு (சிறை) செல்வார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்தார்.அண்ணாவின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் அதிமுக(அம்மா, புரட்சி தலைவி அம்மா) சார்பில் தங்கசாலை மணிக்கூண்டு அருகே பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.இந்த கூட்டத்துக்கு வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பாலகங்கா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் முதல்வர் பேசியதாவது:
அண்ணா தனது பொன்மொழியால் தமிழக மக்களிடையே பெரும் எழுச்சியை உண்டாக்கினார். அண்ணா பிறந்தநாளை கொண்டாடக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான். நீட் தேர்வை எதிர்க்கும் ஒரே கட்சியும் அதிமுக தான்.ஜெயலலிதா, டிடிவி.தினகரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கினார். 10 ஆண்டு காலம் வனவாசம் சென்றவர், முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களை கட்சியில் இருந்து நீக்குகிறார். நான் ஜெயலலிதாவால் 6 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளேன்.
டிடிவி.தினகரன் நாடகமாடி வருகிறார். அதிமுகவுக்கு துரோகம் செய்ய நினைப்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். தினகரன் விரைவில் மாமியார் வீட்டிற்கு (சிறை)போவார். இவ்வாறு முதல்வர் பேசினார்.