டீசல் பெட்ரோலுக்குப் பதில் எத்தனால் தயாரிக்க முடிவு : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
9/8/2025 3:40:03 PM
புதுடெல்லி : பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதில் விரைவில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க முன் வர வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை செய்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாசு குறித்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: “இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசலில் இயக்கப்படும் வாகனங்களால்தான் அதிகளவில் மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் மாற்று எரிபொருள் சக்தியை பயன்படுத்த வேண்டும். நாம அனைவரும் உடனடியாக மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும். பேட்டரிகள், மின்சக்திகள், இயங்கக்கூடிய கார்களையும், பேருந்துகளையும் பயன்படுத்த, இனி இது போன்ற வடிவமைபிலுள்ள வாகனங்களை தயாரிக்க தனியார் வாகன தயாரிப்பாளர்கள் முன் வரவேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத வாகனங்களை தயாரிக்க வேண்டும். இந்த புதிய திட்டத்திற்கு அரசுக்கு ஒத்துழைப்பு தந்து வாகன தயாரிப்பாளர்கள் மாறாவிட்டால், அவர்கள் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.
இது குறித்து மின் வாகனங்கள் தயாரிக்க வேண்டும் என அரசு சார்பில் இதற்கு முன்பே வாகன தயாரிப்பாளர்களை அழைத்து பேசியபோது பேட்டரி விலை மிகவும் அதிகம் என வாகன தயாரிப்பாளர்கள் கூறினர். இப்போது, பேட்டரியின் விலை 40 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டது. மின் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்தால் பேட்டரி விலை மேலும் குறையும். மின் வாகனங்கள் தொடர்பான கொள்கையை, அரசு விரைவில் வெளியிட உள்ளது. நாட்டின் பல இடங்களில், மின்வாகனங்களுக்கு, ‘ரீசார்ஜ்’ நிலையங்கள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில், இந்தியாவில், அதிக அளவிலான மின் வாகனங்களை இயக்கப்பட திட்டம் ஒன்றும் உள்ளது. இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அதிகளவில் மின் வாகனங்கள் இயக்கப்படும் என்பது உறுதியாக சொல்லுகிறேன்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் இறக்குமதிக்கு நாம் அதிக அளவிலான பணத்தை செலவிடுகிறோம். இதை, குறைக்க வேண்டும். இதற்கும் மாற்று எரிபொருளாக பருத்தி, நெல், கோதுமை, மூங்கில் கழிவுகளிலிருந்து எத்தனால் தயாரிக்கலாம். எத்தனாலை பயன்படுத்தி, வாகனங்களை இயக்கினால் மாசு ஏற்படாது. எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகளை துவக்கவும், அரசு முடிவு செய்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் சுற்றுச் சூழலை பேணிக்காக்க மாற்று எரிபொருள் திட்டத்தை பயன்படுத்துவதைப் போல நாமும் விரைவில் மாற்று எரிபொருளுக்கு மாறுவோம்’’ எனப்பேசினார்.