பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் தினகரன் மனைவி மற்றும் உறவினர்கள் சந்திப்பு: முக்கிய ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர்
9/5/2025 4:15:05 PM
பெங்களூர்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுடன் டிடிவி.தினகரனின் மனைவி மற்றும் உறவினர்கள் சந்தித்து பேசினர். அப்போது முக்கிய ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக பெண் போலீஸ் அதிகாரியால் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் சசிகலாவை சிறையில் அடிக்கடி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து செல்வதாக சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம்சாட்டினர். இதனால் அவருக்கு சிறையில் வழங்கப்பட்ட சலுகைகள் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 15 நாட்களுக்கு ஒருமுறை சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை அவரது உறவினர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் நேற்று சசிகலாவின் உறவினர்களான டிடிவி.தினகரனின் மனைவி அனுராதா மற்றும் மைத்துனர் வெங்கடேஷ், ராஜராஜன், இளவரசியின் மகன் விவேக், மகள் சைலஜா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், கர்நாடக மாநில அதிமுக (அம்மா) அணி செயலாளர் புகழேந்தி உட்பட 12 பேர் சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின் போது, குடும்ப விஷயங்கள் பற்றி பேசியதாக தெரிகிறது.மேலும், முக்கிய ஆவணங்கள் சிலவற்றில் டிடிவி.தினகரன் மனைவி அனுராதா, சசிகலாவிடம் கையெழுத்துகளை வாங்கி சென்றதாக தெரிகிறது.