பெப்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ரத்து: தயாரிப்பாளர்களுடன் உடன்பாடு?
9/5/2025 4:13:46 PM
சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) சார்பில் இன்று நடக்க இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களுடன் சுமூக உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.பெப்சி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, பெப்சியில் இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ம் தேதி முதல் சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் 40க்கும் மேற்பட்ட படங்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டு, பல கோடி ரூபாய் முடங்கியுள்ளது. நேற்றிரவு தயாரிப்பாளர்கள் சங்கம் - பெப்சி இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் இரு அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு 12 மணி வரை நடந்தது. இதில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை இன்றும் தொடர உள்ளது. ஆனால், பெப்சியின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் பெப்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.