ஊழல் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட வேலூர் காசநோய் துணை இயக்குநர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு: உதவியாளர்கள் வீடுகளிலும் சோதனை
9/5/2025 3:49:23 PM
வேலூர்: வேலூரில் ₹1 கோடி வரை ஊழல் செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட காசநோய் துணை இயக்குநர் மற்றும் அவருக்கு உதவிய 2 பேரின் வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனராக ராஜா சிவனாந்தம் பணியாற்றி வந்தார். காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டம் முழுவதும் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் இவர்கள் திடீரென பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம்தேதியில் இருந்து 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதிவரை 19 தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வருவதாக கூறி அவர்களின் ஊதியத்தொகையை, காசநோய் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ரமேஷ், தர் ஆகியோர் உதவியோடு பணத்தை கையாடல் செய்ததாகவும், மருந்து பொருட்கள் வாங்கியதில் ₹1 கோடி வரை ஊழல் செய்ததாகவும் ராஜா சிவானந்தம் மீது புகார்கள் வந்தன.
இதையடுத்து அவர் மீது விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், களப்பணியாளர்கள் சம்பளம் கையாடல் மற்றும் மருந்து பொருட்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 30ம்தேதி ஓய்வு பெற இருந்த ராஜா சிவானந்தம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு விஜிலென்ஸ் ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சத்துவாச்சாரியில் உள்ள ராஜா சிவானந்தம், ரமேஷ் ஆகியோர் வீடு மற்றும் தொரப்பாடியில் உள்ள தர் வீடு என ஒரே நேரத்தில் 3 வீடுகளில் சோதனையை தொடங்கி நடத்தி வருகின்றனர். வீட்டின் உள்ளே இருந்து வெளியே செல்லவோ, வெளியில் இருந்து வீட்டிற்கு வரவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை. சோதனைக்கு பிறகே ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதா என தெரிய வரும்.இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.