சென்னை கொட்டிவாக்கத்தில் இன்று முரசொலி பவள விழா பொதுக்கூட்டம்: அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு
9/5/2025 3:45:14 PM
சென்னை: முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கத்தில் இன்று நடக்கிறது. இதில் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.முரசொலி பவள விழா மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கம் (ஓ.எம்.ஆர்.) ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. கூட்டத்துக்கு திமுக பொது செயலாளர் க.அன்பழகன் தலைமை வகிக்கிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ வரவேற்கிறார்.
இந்த விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்.குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன்,
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் என்.சேதுராமன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து, அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநிலப் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் பி.என்.அம்மாவாசி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றியுரையாற்றுகிறார். விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து திமுகவினர் சென்னையில் குவியத் தொடங்கியுள்ளனர்.