ரூபாய் நோட்டு வாபசால் கருப்பு பணம் ஒழிந்ததா?: விவரம் இல்லை என்கிறது ஆர்பிஐ
9/5/2025 3:37:11 PM
புதுடெல்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் எந்த அளவுக்கு கருப்பு பணம் ஒழிந்தது என்பது குறித்து விவரம் கிடைக்கவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இந்த நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழியாது, பாதிப்பு தான் ஏற்படும் என எதிர்கட்சிகள் கூறிவந்தன.
இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்து ஆர்பிஐ அறிக்கை அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:ரூபாய் நோட்டு வாபசால் எந்த அளவுக்கு கருப்பு பணம் ஒழிந்தது என்பதற்கான விவரம் கிடைக்கவில்லை. கருப்பு பணம் எந்த அளவுக்கு வெளிக்கொண்டுவரப்பட்டது என்ற தகவலும் இல்லை. பழைய ரூபாய் நோட்டுகள் பல வங்கிகள், அஞ்சல் அலுவலகங்களில் இருந்து இன்னும் முழுமையாக ஆர்பிஐக்கு வரவில்லை. அதனை முழுமையாக கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்தமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் போது இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. இவ்வாறு ஆர்பிஐ கூறியுள்ளது.