மும்பையில் விநாயகர் சிலைகள் கரைப்பு 40,000 போலீசார், 5 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு
9/5/2025 3:36:17 PM
புதுடெல்லி: மும்பையில் விநாயகர் சிலைகள் கரைப்பின்போது அசம்பாவிதங்களை தவிர்க்கும்பொருட்டு 40,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முக்கிய இடங்களில் 5 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மும்பையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தியையொட்டி, கடந்த வாரம் மும்பை நகரில் ஆயிரக்கணக்கான சிலைகள் வைக்கப்பட்டன. சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இந்நிலையில், இந்த விநாயகர் சிலைகள் அங்குள்ள நீர்நிலைகளில் இன்றும், நாளையும் கரைக்கப்படுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை மும்பை போலீசார் செய்துள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக, முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 119 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. ஊர்வலத்தை கண்காணிக்க முக்கிய இடங்களில் சுமார் 5 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட சுமார் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர துணை ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலம் இடையூறின்றி செல்லும் வகையில், போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. ஒலி மாசுவை தடுக்கும் பொருட்டு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.