பலாத்கார வழக்கில் சிக்கி சிறை சென்ற ராம் ரகீம் ஆசிரமத்தில் நவீன ஆயுதங்கள் பறிமுதல்
9/5/2025 3:35:34 PM
சிர்சா: பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சாமியார் ராம் ரகீமின் ஆசிரமத்திலிருந்து ஏராளமான நவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற புதிய சீக்கிய மத அமைப்பு இயங்கி வருகிறது. சீக்கிய மத கொள்கைகள், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மத கொள்கைகளை கலந்து புதிய மத கொள்கைகளை இந்த அமைப்பினர் பின்பற்றி வருகின்றனர். இதன் தலைவராக ராம் ரகீம் உள்ளார். இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த 2 பெண்களை இவர் பலாத்காரம் செய்ததாக அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ கோர்ட் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அரியானா மாநிலத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
ராணுவம் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து கலவரம் கட்டுக்குள் வந்தது. இதை தொடர்ந்து சிர்சாவில் உள்ள தலைமை ஆசிரமம் மற்றும் அதன் கிளைகளில் கடந்த சில நாட்களாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது ஏராளமான நவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிர்சா சதார் காவல் நிலைய தலைமை அதிகாரி தினேஷ் குமார் கூறுகையில், ராம் ரகீம் கைது செய்யப்பட்டவுடன் அவர் வசம் மற்றும் அவரது சீடர்கள் வசம் உள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற நோக்கில ்சோதனை நடத்தப்பட்டது. இதில் லைசன்ஸ் பெறப்பட்ட ஆயுதங்களுடன் லைசன்ஸ் இல்லாத நவீன ஆயுதங்களும் சிக்கின. 9 எம்எம் பிஸ்டல்கள், சிங்கிள் மற்றும் டபுள் பேரல் துப்பாக்கிகள், எந்திர துப்பாக்கிகள் போன்றவை இதில் அடங்கும் என்றார். சோதனை தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.