இருதரப்பு மீனவர்கள் மோதல் மறியல் செய்த 500 பேர் கைது: நாகையில் பதற்றம்: போலீஸ் குவிப்பு
9/4/2025 4:00:12 PM
நாகை: நாகை துறைமுகம் அருகேயுள்ள பழைய மீன் இறங்கு தளத்தில் மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை விற்று வந்தனர். கடந்த 6 மாதங்கள் முன் அக்கரைப்பேட்டையில் புதிய மீன் இறங்கு தளம் திறக்கப்பட்டு, அங்கு விற்பனை நடந்து வருகிறது. அங்கு மீன் விற்பனை செய்ய அக்கரைப்பேட்டை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அக்கரைப்பேட்டை மீனவர்களுக்கும், நம்பியார் நகர் மீனவர்களுக்கும் இடையே மோதல்கள் இருந்து வந்தன. மீனவர்கள் பயன்படுத்தாமல் உள்ள துறைமுகம் அருகேயுள்ள பழைய மீன் இறங்கும் தளத்தில் மீன்களை விற்கப்போவதாக நம்பியார் நகர் மீனவர்கள் அறிவித்திருந்தனர். நேற்று மாலை நம்பியார் நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீன் இறங்கும் தளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அக்கரைப்பேட்டை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பீர் பாட்டில், பிராந்தி பாட்டில், இரும்பு குழாய், உருட்டுக்கட்டை போன்றவற்றைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். மற்றொரு தரப்பினர் கற்களை வீசினர். இதில், 27 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர்.
இந்நிலையில் ஊசிமாதா கோயில் துறைமுகத்தில் மீனவர்கள் வைத்திருந்த வலைகள் மற்றும் 3 பைக்குகளுக்கு தீ வைக்கப்பட்டது. நம்பியார் நகர் மீனவர்கள் ஆண்களும், பெண்களும் மாலை 6 மணி முதல் மாவட்ட அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட நம்பியார்நகர் மக்கள் இரவு முழுவதும் சாலையோரங்களிலிலே இருந்தனர். அவர்கள் இன்று காலை நாகை புது பஸ்நிலையத்தில் அனைத்து வழிகளை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். பஸ்கள் வெளியே வரமுடியவில்லை. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலை மற்றும் வெளியூர்களுக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர். இதேபோல் மாவட்ட நூலகம், நகராட்சி தண்ணீர் டேங்க் பகுதியிலும் மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். எஸ்பி தேஷ் முக் சேகர் சஞ்சய் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்துபோகும்படி கூறினார். அவர்கள் நகராததால் நிலைமை சரிசெய்ய அவர்களை கைதுசெய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 3 இடங்களிலும் மறியல் செய்த 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.