நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலம்: சென்னையில் 3 ஆயிரம் சிலைகள்
8/25/2017 3:22:42 PM
சென்னை: நாடு முழுவதும் விநாயகர்சதுர்த்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் அவல், பொரி, பழங்கள், கொழுக்கட்டை படைத்து பொதுமக்கள் வழிபட்டனர். கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சென்னையில் 3 ஆயிரம் சிலைகள் வைத்து வழிபட போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில், பிள்ளையார்பட்டி கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிகாலை 5 மணிக்கே கோயில்களில் நடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், சுண்டல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அலங்காரக்குடை, எருக்கம் பூ மாலை, பழ வகைகள் மற்றும் பொரி, வெல்லம், அவல், விளாம்பழம், அருகம்புல், களக்காய் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்தனர்.
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையை படைத்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, வடபழனி, கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பூஜை பொருட்கள் வாங்க நேற்று முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. வாழை குருத்து, தாழம்பூ, அருகம்புல், தாமரை பூ, வில்வம், மாவிலை தோரணம் விற்பனையும் களைகட்டியது. விலை வழக்கத்துக்கு மாறாக சற்று கூடுதலாக இருந்தது. களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். வழிபாடு நடத்தப்படும் அனைத்து சிலைகளையும் நீர்நிலைகளுக்கு எடுத்து சென்று கரைப்பது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
சென்னையில் மட்டும் 3 ஆயிரம் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த ஆண்டு 3 முதல் 13 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய இடங்களில் யாரும் சிலைகளை வைக்கக் கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். உரிய அனுமதி பெற்ற பின்பே சிலைகள் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1, 3 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது. இதற்காக சென்னையில் சீனிவாசநகர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் கடலில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.