உ.பி.யில் வெள்ளப்பெருக்கு பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு
8/25/2017 3:20:08 PM
லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்தது. 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருவதுடன், அண்டை நாடான நேபாளத்தில் இருந்து வரும் வெள்ளத்தால், பல்வேறு பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கோராக்பூர் உள்ளிட்ட 25 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்படுகின்றனர்.
சாலைகள் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளத்தின் காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,067 கிராமங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, 57 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை, குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவத்தினர் மீட்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.