ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜி. கல்லூரி முதல்வருட மாணவர்களுக்கு வரவேற்பு
8/24/2017 5:50:09 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 18ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கல்லூரி தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் வெங்கடேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் அரங்க.ராமலிங்கம் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
அப்போது அவர், ‘’மாணவர்களிடையே முயற்சியும், பயிற்சியும் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். ஒழுக்கமும் மிகவும் முக்கியம். மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளையும் செவ்வனே செய்ய வேண்டும்’ என்றார். கல்லூரியின் அறக்கட்டளை சார்பில், முதலாம் ஆண்டில் சிறந்த 8 மாணவர்களுக்கு, 4 ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் ரூ.5 லட்சத்தை கல்லூரி நிர்வாகம் ஏற்று காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
கல்லூரி நிர்வாக அறங்காவலர் ராமமூர்த்தி, துணைத்தலைவர் புருஷோத்தமன், இணைச்செயலாளர் சந்திரசேகர், கல்வி இயக்குனர் சுப்ரமணியராஜு, குழு உறுப்பினர்கள் அரிகிருஷ்ணன், சந்திரோதயம்மாள், வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் ரத்தினசபாபதி நன்றி கூறினார்.