முதல்வர் எதிர்ப்பு எம்எல்ஏ எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது: அறந்தாங்கி எம்எல்ஏ தினகரனுக்கு ஆதரவு
8/24/2017 3:47:32 PM
சென்னை: அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ டி.டி.வி.தினகரனுக்கு இன்று திடீரென ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவு கொடுத்து வந்த 19 எம்எல்ஏக்கள் திடீரென தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இந்த 19 எம்எல்ஏக்களும் டி.டி.வி.தினகரனுக்கு தற்போது ஆதரவு கொடுத்து வருகின்றனர். டி.டி.வி.தினகரன் 19 எம்எல்ஏக்களையும் பாண்டிச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் மூன்று நாட்களாக தங்க வைத்துள்ளார். இந்த 19 எம்எல்ஏக்களை, மீண்டும் அரசுக்கு ஆதரவாக செயல்பட வைக்க அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முயற்சி செய்து வருகிறார்கள். மேலும், அவர்களின் உறவினர்களிடமும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், 19 எம்எல்ஏக்களும் முதல்வருக்கு எதிராக செயல்படுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று டி.டி.வி.தினகரன் அணிக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி, தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். இது எடப்பாடி அணியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, டி.டி.வி.தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அவர்களது ஆதரவு எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு ஆதரவான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 111ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.