ஆம்பூர் ஜிஹெச்சில் தொடரும் வேதனை: சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் வாலிபர் சாவு
8/24/2017 3:36:04 PM
ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா ‘பி’ பகுதியில் பழமையான முத்தாலம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தேர் திருவிழா கடந்த 13ம்தேதி தொடங்கியது. 8ம்நாள் திருவிழா நேற்றிரவு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேரை பக்தர்கள் இழுத்து வந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் தெருவில் தேர் வந்தபோது, அங்கிருந்த மின் கம்பத்தில் இருந்த மின்சார பெட்டியில் தேர் உரசும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைபார்த்த சிலர் தேர் உரசாமல் இருக்க, மின்சார பெட்டியை உயர்த்தி பிடித்ததாக தெரிகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன்(25) என்பவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவரை, பொதுமக்கள் மீட்டு 12.30 மணியளவில் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் இல்லை. அதிகாலை 2 மணி வரை காத்திருந்தும் மருத்துவர்கள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த தியாகராஜனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்களிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தியாகராஜனுக்கு, பணியில் இருந்த நர்ஸ்கள் சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. ஆனால் சிறிது நேரத்திலேயே தியாகராஜன் பரிதாபமாக இறந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மருத்துவமனையின் கேட்டிற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் தியாகராஜனின் சடலத்தை, அவரது உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து சென்றுவிட்டனர். இதையறிந்த ஆம்பூர் தாசில்தார் மீராபென் காந்தி மற்றும் வருவாய் துறையினர் மருத்துவமனைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 3.30 மணியளவில், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தியாகராஜன் வீட்டிற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த 13ம்தேதி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் கார் விபத்தில் சிக்கிய சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட சிறுமி வைஷ்ணவி ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இந்த சம்பவம் நடந்த 10 நாட்களில் மீண்டும், அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் வாலிபர் இறந்த சம்பவம் மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.