ஆர்தரின் நடத்தையை சகிக்க முடியவில்லை: பிசிபி நோட்டீசுக்கு உமர் அக்மல் பதில்
8/24/2017 3:00:18 PM
கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் உமர் அக்மல். கடந்த சில நாட்களுக்கு முன், தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக, ஊடகங்களிடம் புகார் தெரிவித்தார். முன் அனுமதி பெறாமல் ஊடகங்களை சந்தித்ததுடன், அணி நிர்வாகி ஒருவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் கூறியதால், உமர் அக்மல் தனது ஒப்பந்த விதிமுறைகளை மீறி விட்டதாக கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) விளக்கம் கேட்டு, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கான பதிலை உமர் அக்மல் சமர்ப்பித்துள்ளார். அதில், ‘’மிக்கி ஆர்தரின் நடத்தை சகிக்க முடியாத வகையில் இருந்தது. எனது குறைகளை எடுத்து கொண்டு பொது மக்களிடம் செல்ல அதுவே என்னை கட்டாயப்படுத்தியது’’ என வெளிப்படையாகவே உமர் அக்மல் தெரிவித்துள்ளார்.