2வது மனைவியுடன் தங்கியிருந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை: கீரப்பாக்கத்தில் பயங்கரம்
8/23/2017 3:17:12 PM
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே 2வது மனைவியுடன் தங்கியிருந்த பிரபல ரவுடி சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை துரைப்பாக்கம் அடுத்த கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் வீரமணி (24). பிரபல ரவுடியான இவர், முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆட்டோ டிரைவரின் மனைவியை 2வது திருமணம் செய்து, கடந்த 7 ஆண்டுகளாக அவருடன் வசித்து வந்தார். வீரமணி மீது கண்ணகி நகர், சேலையூர் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். கடந்த 3 மாதங்களுக்கு முன் வெளியே வந்தார். ஒரு மாதமாக கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம், அங்காளம்மன் கோயில் 5வது தெருவில் 2வது மனைவியுடன் ஒரு குடிசை வீட்டில் வாடகைக்கு வசித்துவந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு 10 மணிக்கு ஒரு பைக்கில் 3 பேர் வீரமணி வீட்டுக்கு வந்தனர். வீட்டின் கதவை தட்டி கஞ்சா கேட்டுள்ளனர். இதனால் வீரமணி அருகே காலி இடத்தில் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை எடுக்க சென்றார். அவருடன் சென்ற கும்பல் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வீரமணியை சரமாரியாக வெட்டினர். காயம் அடைந்த வீரமணி தப்பி ஓட முயன்றார். ஆனால் கும்பல் அவரை விரட்டியது. இதில் அங்குள்ள இரும்பு முள்வேலி கம்பியில் சிக்கி தடுமாறி வீரமணி விழுந்தார். அப்போது விரட்டிச்சென்ற கும்பல், வீரமணியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து வீரமணி உயிரிழந்தார். அவர் இறந்ததை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து அக்கும்பல் பைக்கில் தப்பி சென்றது.
இதைப் பார்த்ததும் வீரமணி மனைவி கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். மக்கள் கூடியதால் பரபரப்பு நிலவியது. இதுபற்றி அறிந்ததும் காயார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வீரமணியின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றிய புகாரின்படி காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை கும்பலை தேடி வருகின்றனர். இக்கொலை வழிப்பறி, கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் நடந்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கீரப்பாக்கத்தில் உள்ள 1ம் நம்பர் கல்குவாரியிலிருந்து 6ம் நம்பர் கல்குவாரி வரையுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை, தொழில் போட்டி காரணமாக பல்வேறு வாகனங்களில் ஏராளமான மர்ம ஆசாமிகள் வருகின்றனர். இப்பகுதியில் டாஸ்மாக் பார் தகராறு, கஞ்சா தொழில் போட்டி, போதை தகராறு காரணமாக இதுவரை 5-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனையை போலீசார் கண்டுகொள்வதில்லை’ என்றனர்.