300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2065 ஏரிகளை சீரமைக்க திட்டம் கோட்டையில் கொடியேற்றி முதல்வர் பேச்சு
8/15/2017 3:39:33 PM
சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி இன்று காலை 8.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார். அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயர்களில் விருது வழங்கப்பட்டது. நாடு முழுவதும் 71வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை, ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றினார். முன்னதாக தேசிய கொடியேற்ற வரும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போர் நினைவு சின்னம் அருகே போலீசார் இரு சக்கர வாகனங்கள் புடைசூழ ஜார்ஜ் கோட்டையின் நுழைவு வாயில் அருகே அழைத்து வந்தனர். கோட்டை கொத்தளத்தின் முன்பாக உள்ள அணிவகுப்பு மரியாதை மேடை அருகே வந்த முதல்வரை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தென்னிந்திய பகுதிகளின் முப்படை தலைவர்கள் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆகியோரை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து 8.20 மணிக்கு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். திறந்த ஜீப்பில் முதல்வர் காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்டார். சரியாக காலை 8.30 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது காவல் துறையின் கூட்டுக்குழல் இசை மூலம் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுதந்திர தின உரையாற்றினார். அவர் பேசிய உரையின் விவரம்: இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை மாநிலம் முழுவதும் ஆயிரத்து 114 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4 ஆயிரத்து 199 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு முன்னுரிமை கொடுத்து 2017-2018ம் ஆண்டுக்கு 26 ஆயிரத்து 932 கோடியே 31 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
நடப்பாண்டில் 391 கோடி ரூபாய் செலவில் பள்ளிகளுக்கு உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும். உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இயற்கை மரணம் அடையும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி ரூ.10,000 தற்போது ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய தென் மாவட்டங்களில் 19 ஆயிரத்து 615 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற் பூங்காக்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகள் திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக, 1519 ஏரிகளில் 100 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை முடியும் தருவாயில் உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தற்போது 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2065 ஏரிகளை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சின்னத்திரை, பெரியதிரை கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவ்விருதுகள் விரைவில் வழங்கப்படும். தியாகிகள் ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 13 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து முதல்வர் பல்வேறு விருதுகளை வழங்கினார்.
அப்துல் கலாம் விருது பேராசிரியர் தியாகராஜனுக்கும், துணிவு, சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது திருவண்ணாமலையை சேர்ந்த ப்ரீத்திக்கும், முதல்வரின் நல்ஆளுமை விருது காவல் வீட்டு வசதி வாரியத்தில் கழிவுப்பொருட்களை நடைபாதை கற்கள் பதிப்பதற்கும், செங்கற்களாக பயன்படுத்தியதற்கும், பேரிடர் மேலாண்மைக்காக வேளாண் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடிக்கும், மொத்த தீர்வு திட்டத்தை செயல்படுத்தியதற்காக வணிகவரித்துறை அமைச்சர் வீரமணிக்கும், கூடுதல் செயலாளர் பிரபாகருக்கும், சென்னை மருத்துவ கல்லூரி கல்லீரல் சிகிச்சைத்துறை தலைவர் நாராயணசாமிக்கும், வருவாய்த்துறை முதன்மை செயலாளர் சத்திய கோபாலுக்கும் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதை தொடர்ந்து முதல்வர் அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஐகோர்ட் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.