எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் இணைந்தால் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ்பெற தினகரன் தீவிரம்
8/15/2017 3:38:57 PM
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தால் ஆட்சியை கவிழ்க்க தினகரன் புதிய வியூகம் வகுத்து வருகிறார். அதோடு கட்சியை கைப்பற்றவும் அவர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் அதிமுகவில் அடுத்தடுத்த பரபரப்பு நிலவுகிறது.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். ஆனால் அவரை திடீரென்று பதவியில் இருந்து விலகும்படி சசிகலா உத்தரவிட்டதால் அவர் கட்சியை உடைத்தார். அவருக்கு 12 எம்எல்ஏக்கள், 12 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் மீதம் உள்ள 123 எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர் முதல்வர் பதவியை பிடிக்க காய் நகர்த்தினார். ஆனால் அவர் மீதான வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்ததால், அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். கட்சி அவரது கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஆனால் அவர் கட்சியை தவறான வழியில் நடத்தத் தொடங்கினார். அவரை சிலர் தூண்டி விட்டதால் ஆட்சியை கைப்பற்ற விரும்பினார். இதனால் ஆட்சியை கைப்பற்ற பல அதிரடி முடிவுகளை எடுக்கத் தொடங்கிவிட்டார். இதனால் மூத்த தலைவர்கள் பேச்சையும் மீறி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அமைச்சர்கள் பலர் வழக்குகளில் சிக்கினார். அவரும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கட்சியில் இருந்து அவர் ஒதுக்கப்பட்டார். கட்சியை மூத்த தலைவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கட்சியில் ஒதுங்கியிருந்த தினகரன் மீண்டும் கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்தார். இதனால் கட்சி அலுவலகத்துக்கு வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி அலுவலகத்துக்குள் தேவையில்லாமல் வந்து குழப்பம் விளைவித்தால் அவர் கைது செய்யப்படுவார் என்ற நிலை உருவானது. இதனால் கட்சி அலுவலகத்துக்கு வருவதை தினகரன் ரத்து செய்தார். மேலும் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 9 பேரின் தொகுதிக்குள் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தார்.
இந்தநிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் கூறினார். பன்னீர்செல்வத்தையும் கடந்த முறை சந்திக்க மறுத்து இணைப்புக்கு நெருக்கடி கொடுத்தார். இரு அணிகளும் இணைவதற்கான சூழ்நிலை உருவானது. இரு அணிகளும் இணைந்தால் கட்சியும், ஆட்சியும் தன்னை விட்டும், தனது குடும்பத்தை விட்டும் சென்று விடும் என்று தினகரன் கருதினார். இதனால் எம்எல்ஏக்களுக்கு வலை வரித்தார். அவர் சிறையில் இருந்தது வந்ததும் 36 எம்எல்ஏக்கள் அவரை சந்தித்தனர். அவர்கள் ஆதரவு தனக்கு இருந்தால் போதும் என்று நினைத்தார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு கிடைக்காமல் இருந்து வந்தது. அவரை சந்தித்த பலரும், எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்தனர்.
இந்தநிலையில் மதுரை மேலூரில் நேற்று அவர் நடத்திய கூட்டத்தில் 20 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வத்துடன் இணைந்தாலும் ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டி அவருக்கு இல்லாமல் போய்விடும். அதேநேரத்தில் இரு அணிகளும் இணைந்தால் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மூலம் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ்பெறுவது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இரு அணிகளும் இணையாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பது என்றும் முடிவு செய்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உடனடியாக எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இரு அணிகளும் இணையும் பட்சத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மெஜாரிட்டி பக்கம் செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் அதிமுகவில் நிகழும் அடுத்தடுத்து நிகழ்வுகளை தொண்டர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.