திருத்தணி முருகன் கோயிலில் ஆடிகிருத்திகை விழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
8/15/2017 3:38:16 PM
திருத்தணி: திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று ஆடி பரணி விழா நடந்தது. இன்று அதிகாலை ஆடி கிருத்திகை விழா நடந்தது. இதைமுன்னிட்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து, மேளதாளம் முழங்க கோயிலுக்கு வந்தனர். படிகட்டு வழியாக முருகனின் பக்தி பாடல்களை பாடியபடியும் அரோகரா, அரோகரா என்று முழங்கியபடியும் மலை கோயிலுக்கு வந்தனர். பின்னர், காவடியுடன் வள்ளி, தெய்வானையுடன் அமர்ந்திருந்த முருகனை வழிபட்டனர். பழம், தேங்காய் உடைத்து அர்ச்ச்னை செய்து குடும்பம் குடும்பமாக நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர், மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கவசம், பச்சை மரகத கல் அணிவிக்கப்பட்டிருந்தது. பக்த குழுக்கள் சார்பில் பக்தர்களுக்கு ஆங்காங்கே தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக மலை கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
விழாவையொட்டி திருத்தணி மாபொசி சாலை, அரக்கோணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. நகராட்சி ஆணையர் முருகேசன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து துப்புரவு பணிகளை மேற்கொண்டு குடிநீர் வழங்கினர். கோட்ட பொறியாளர் பாஸ்கர் தலைமையில் மின்சாரம் சீராக விநியோகம் செய்யப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வெளியூர்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுவதற்கு வசதியாக தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. பஸ்களை கண்காணிக்க ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. நேற்று திடீரென மழை பெய்ததால் சாமினா பந்தல் சரிந்து விழுந்தது. அங்கு பணியாற்றிய அதிகாரிகளுக்கு மின்விளக்கு வசதி செய்யவில்லை. விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் திருத்தணி மலைகோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
பக்தர்கள் அவதி
இலவச தரிசனம் மற்றும் சிறப்பு வழி தரிசனத்துக்கு ரூ.150, ரூ.50 வசூலிக்கப்பட்டது. பக்தர்கள் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வந்த விஐபி, கோயில் உபயதாரர்கள் மலை கோயில் வந்து தரிசனம் செய்வதற்கு வசதியாக கார் பாஸ் வழங்கப்பட்டது. ஆனால், தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும்போது, சென்னை, திருப்பதி பக்தர்களின் கார்களை உரிய வழித்தடத்தில் விடாமல் சம்பந்தமில்லாத அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை வழியாக திருப்பிவிட்டதால் பல கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதில், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனும் பாதிக்கப்பட்டார். இனிவரும் காலங்களில் கோயில் நிர்வாகம் பக்தர்கள் சிரமமின்றி செல்ல வழிவகை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.