அசாமில் கனமழை: 15 லட்சம் பேர் பாதிப்பு: ஒரே நாளில் 10 பேர் பலி
8/14/2017 6:18:57 PM
கவுகாத்தி: அசாமில் கனமழைக்கு சுமார் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்தனர். அசாமில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதையடுத்து, மழையின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக, மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கனமழையால், 21 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சாலைகள் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன. நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கனமழைக்கு இதுவரை சுமார் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அசாமில் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.