கள்ளக்காதலன்களுக்கு இடையே மோதல்: உல்லாசமாக இருப்பதுபோல் நடித்து கார் புரோக்கரை கொன்ற இளம்பெண்
8/14/2017 3:26:37 PM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை சையத்நகரை சேர்ந்தவர் சதாம் உசேன் (26). பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது, ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக் காததால், அவரது மனைவி பர்வீன் (22), சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவருக்கும், மகனூர்பட்டியை சேர்ந்த மகபூப் ரஹ்மான்(30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகவும், அவர் தனது கணவரை கடத்தியிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார். அதையடுத்து, போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் மகபூப் ரஹ்மான் மற்றும் அவரது உறவினரான சபானா (32) என்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள், சதாம் உசேனை கொன்று மகனூர்பட்டியில் சாலையோர பள்ளத்தில் புதைத்ததை ஒப்புக்கொண்டனர். அதைதொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது: சபானாவின் கணவர் கலிபாஷா (35), கத்தாரில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் இருப்பதால், சபானா தனது குழந்தைகளுடன் சிங்காரப்பேட்டை சையத்நகரில் வசித்து வந்தார். அப்போது, உறவினரான மகனூர்பட்டியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் மகபூப் ரஹ்மானுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
ஒன்றரை ஆண்டுக்கு முன், தொழில்ரீதியான பழக்கத்தில் சபானாவுடன் சதாம்உசேன் நெருங்கி பழகினார். இருவரும் தனிமையில் சந்தித்து தங்களுடைய கள்ளக்காதலை வளர்த்தனர். இதுபற்றிய தகவல் மகபூப் ரஹ்மானுக்கு தெரியவந்தது. இதனால் சபானாவுடன் யார் கள்ளத்தொடர்பு வைப்பது என்கிற ரீதியில் சதாம்உசேனுக்கும், மகபூப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், மகபூப்பை சந்திக்கக்கூடாது என சதாம்உசேன் சபானாவை கண்டித்ததாகவும், அதை மீறி அவர் செயல்பட்டதால் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரை தீர்த்துக்கட்ட சபானாவும், மகபூப் ரஹ்மானும் திட்டம் தீட்டினர்.
ஓரிரு நாட் களுக்கு முன் சதாம் உசேனை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்த சபானா, அவருடன் உல்லாசமாக இருப்பதுபோல் நடித்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த மகபூப் ரஹ்மானுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர், அவருடைய சடலத்தை பைக்கில் எடுத்து சென்று மகனூர்பட்டியில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் புதைத்துவிட்டு சென்றுள்ளனர். சதாம்உசேன் மனைவி அளித்த புகாரில் மகபூப்புடன் கணவருக்கு இருந்த மோதல் பற்றி தெரிவித்திருந்ததால், அவரை பிடித்து நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.
கைது செய்யப்பட்ட சபானா, மகபூப் ரஹ்மான் இருவரையும் ஊத்தங்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அங்குள்ள சிறையில் அடைத்தனர். இதனிடையே கொலை செய்து புதைக்கப்பட்ட சதாம் உசேன் உடல், ஊத்தங்கரை தாசில்தார் சுப்பிரமணியன் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டு அரசு மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.