பட்டாபிராம் பகுதியில் வாகன ஆக்கிரமிப்பில் திணறும் சிடிஎச் சாலை: கண்டுகொள்ளாத போலீஸ்
8/14/2017 3:15:53 PM
பட்டாபிராம்: ஆவடி அருகே இந்து கல்லூரி பகுதியில் சிடிஎச் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கனரக லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுடன் விபத்துகளும் நடைபெறுகிறது. இந்த வாகன ஆக்கிரமிப்பை அப்பகுதி போலீசார் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். சென்னை-திருப்பதிக்கு பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர் வழியாக சிடிஎச் நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு ஏராளமான கல்லூரிகளும் நிறுவனங்களும் இயங்கி வருவதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படும்.
வாகன நெரிசல் மிக்க சிடிஎச் சாலையின் பட்டாபிராம், இந்து கலை கல்லூரி அருகே இந்திய உணவு கழக குடோனுக்கு வரும் ஏராளமான லாரிகள் சாலையை ஆக்கிரமித்து, எந்நேரமும் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.
மேலும், இங்கு மாநகர பேருந்து நிறுத்தங்களை ஆக்கிரமித்து ஷேர் ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் சிடிஎச் சாலையில் காலை, மாலை நேரங்களில் மிகுந்த வாகன நெரிசலுக்கு இடையே சிக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபடுகின்றனர். இதுதவிர, இவ்வழியாக அதிக பாரம் ஏற்றிவரும் கனரக வாகனங்கள், சாலையோரமாக வரும் இருசக்கர வாகனங்களையும் பாதசாரிகளையும் உரசியபடி செல்கின்றன. இதனால் இந்து கல்லூரி அருகே ஏராளமான மக்கள் லாரி, வேன் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் மோதி உயிர் இழக்கின்றனர்.
குறிப்பாக, ஆவடி-சி.டி.எச் சாலை, சிறப்பு காவல் படை அலுவலகம் அருகே ஒன்றுக்கு மேற்பட்ட டிராபிக் போலீசார் நாள்தோறும் நின்று, அவ்வழியாக வரும் இருசக்கர வாகனங்களிடம் மாமூல் வசூலிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர். பட்டாபிராம் சிடிஎச் சாலை பகுதியில் நிலவும் வாகன ஆக்கிரமிப்புகள் குறித்து இப்பகுதி போக்குவரத்து போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும், ஆக்கிரமிப்பு வாகன ஓட்டிகளிடம் வெகுமதி வாங்கிக்கொண்டு, மக்களின் புகார்களை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
எனவே, பட்டாபிராம் இந்து கலை கல்லூரி அருகே சிடிஎச் சாலையில் வாகன ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை மீட்டு, அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.