ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஊத்துக்கோட்டை அருகே ஒருவர் கைது
8/10/2025 2:33:05 PM
ஊத்துக்கோட்டை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய ஒரு டன் செம்மரக்கட்டைகள் ஊத்துக்கோட்டை அருகே பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் இருந்து பென்னலூர்பேட்டை வழியாக சொகுசு காரில் செம்மரக் கட்டைகள் கடத்துவதாக ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சரவணக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி பென்னலூர்பேட்டை எஸ்ஐ பத்மஸ்ரீபபி தலைமையிலான போலீசார் காசிரெட்டிபேட்டை கிராம எல்லையில் உள்ள சுடுகாடு பகுதியில் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகப்படும்படி முன்னால் வந்த காரை மடக்கி விசாரித்தனர். காரில் வந்தவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே, போலீசாரை பார்த்ததும் பின்னால் சொகுசு காரில் வந்தவர்கள் காரை நடுவழியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த காரை பரிசோதனை செய்தபோது, அதில் ஒரு டன் எடை கொண்ட 39 செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காருடன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் வேலூர் மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த ராஜேஷ் (30) என்பதும் செம்மரக்கட்டைகளை கடத்தி செல்வதற்கு பாதுகாப்பு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜேஷிடம், செம்மரக்கட்டைகள் யாருக்கு கடத்தி வந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.