சிவதாண்டவமாடி விவசாயி மனு
8/9/2025 3:01:09 PM
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது. அப்போது வடலூர் மேலக்குப்பத்தை சேர்ந்த விவசாயி பழனிமுருகன்(45) கைகளில் வேல், சிவலிங்கம், பித்தளை பாம்பு உருவம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு சிவதாண்டவமாடினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டு பலர் வேடிக்கை பார்க்கத்தொடங்கினர். அப்போது அவர், உலகத்தையும் இயற்கையையும் காப்பதற்காக சிவதாண்டவம் ஆடுவதாக சொன்னார். அதனை அடுத்து அவர் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கிற்கும் ஆடியபடிச் சென்றார். காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா அவரிடம், ஏற்கனவே நீங்கள் மனு கொடுத்துள்ளீர்கள் உங்கள் மனு நடவடிக்கையில் உள்ளது. எனவே நீங்கள் செல்லலாம் என கூறியதை தொடர்ந்து அவர் அரங்கை விட்டு வெளியேற்றப்பட்டார்.
வெளியில் வந்த அவர் கூறியதாவது: நெய்வேலியில் பல்லாயிரக்கணக்கான மரங்களை வெட்டி சூரிய மின்சாரம் தயாரிக்கிறார்கள். இதனால் இயற்கை அழிக்கப்படுகிறது. மழை பெய்வது தடுக்கப்படுகிறது. விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு உணவு பஞ்சம் வந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை தடுத்து நிறுத்துமாறு வாடிய போதெல்லாம் வாடிய வள்ளலாரும் முருகபெருமானும் என்னை ஆட்கொண்டதன் விளைவாகவே நான் வேல் தாங்கி வந்து ஆளும் அதிகாரிகளிம் முறையிடவந்தேன் என்றார். இவர் என்.எல்.சி க்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர். என்எல்சி யில் அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று வேலை கிடைக்காத விரக்தியில் தான் இப்படி நூதன முறையில் மனு கொடுத்துள்ளார் என அவருடன் வந்தவர்கள் கூறினர்.