திருச்சி ஏர்போர்ட்டில் கடத்தல் தங்கம் பறிமுதல்: 7 பேர் சிக்கினர்
8/8/2025 4:05:13 PM
திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு நேற்றுஏர் ஏசியா விமானம் வந்தது. விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் வான்நுண்ணிறிவு சுங்க துறை அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிரமாக சோதனை நடத்தினர்.
அப்போது செல்போன் சார்ஜரில் மறைத்து சென்னையை சேர்ந்த முஸ்தபா(35), மன்சூர்(30) ஆகியோர் ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் தங்கத்தையும், அதே விமானத்தில் வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அலீம்(32) என்பவர் ரூ.2.85 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
இதே போல சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் வந்த புதுக்கோட்டையை சேர்ந்த சுந்தரம்(45) ரூ.2.85 லட்சம் மதிப்புள்ள 100கிராம் தங்கத்தையும், திருவாரூரை சேர்ந்த சுப்ரமணியன்(43) ரூ.2.26 லட்சம் மதிப்புள்ள 80 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
இதே விமானத்தில் வந்த திருப்பத்தூரை சேர்ந்த வெங்கடேஷ்வரராம்(47) என்பவர் ரூ.2.85 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் தங்கத்தையும், மண்ணச்சநல்லூர் ஜெயசீலன்(39) ரூ.6.80 லட்சம் மதிப்பிலான 240 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்திருப்பது சோதனையில் தெரிய வந்தது.
ரூ.20 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க துறை அதிகாரிகள், பிடிப்பட்ட 7 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கியவர்கள் குருவிகளாக செயல்பட்டு கடத்தி வந்தனரா அல்லது அப்பாவி பயணிகளிடம் கடத்தல் கும்பல் கொடுத்துவிட்டனரா என விசாரிக்கின்றனர்.