தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலை தடுக்க கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் : முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்
7/10/2025 3:38:32 PM
புதுடெல்லி : தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலை தடுக்க கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் என முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியை அடுத்த குர்கானில் நடைபெற்ற விழாவில் மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராமதாஸ் அதுவாலே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், உத்தரபிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் தடுக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் தடுக்கப்பட வேண்டுமானால் கலப்பு திருமணங்களை அரசுகள் ஆதரிக்க வேண்டும். எனவே கலப்பு மணங்களை ஊக்குவிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன். மேலும் கலப்பு மணத்தை ஊக்குவிக்கும் திட்டத்திற்காக ஒவ்வொரு மாநில அரசும் தங்களது பட்ஜெட்டில் இருந்து ரூ.25 கோடியை மாவட்ட நிர்வகாத்திற்கு ஒதுக்க வேண்டும். கலப்பு மண ஜோடிகளுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை, இருவரில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும். இதன் மூலம் சாதிகள் மத்தியில் இருக்கும் பிளவு படிப்படியாக குறையும் என்றார்.
கலப்பு மணங்களை ஊக்குவிக்க மத்திய அரசு தற்போது ரூ.2.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. மாநிலங்கள் தங்களது வசதிக்கேற்ப ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கி வருகின்றன. மேலும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பல்கள் வன்முறையில் ஈடுபடுவது குறித்து பேசுகையில், பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்ட விரோத கும்பல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீது இது போன்ற கும்பல்கள் தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்கள் பசு பாதுகாவலர்கள் அல்ல, கொலைகாரர்கள். சட்டம் ஒழுங்கு மீறப்படும் போது யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும். பசு பாதுகாப்பு கும்பல் என்ற பெயரில் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.