பெண் வக்கீல் தொடர்பால் இன்ஜினியர் படுகொலை : கல்வெட்டான்குழியில் உடல் வீச்சு-பகீர் தகவல்கள்
7/10/2025 3:25:31 PM
நெல்லை : தூத்துக்குடி சண்முகபுரம் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (42). அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்த இவர் அங்கு குடியுரிமை பெற்று வசித்து வந்தார். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
முத்துகிருஷ்ணன் 4 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்தார். தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் விவாகரத்து கோர முடிவு செய்தனர். இதற்காக பாளையங்கோட்டையைச் சேர்ந்த பெண் வக்கீலை முத்துகிருஷ்ணன் அணுகினார். கடந்த மே மாதம் 22ம் தேதி பெண் வக்கீலை பார்ப்பதற்காக பாளையங்கோட்டைக்கு வந்தவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் அம்மமுத்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார்.
முத்துகிருஷ்ணன் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் மாயமான அன்று நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜகோபால் என்பவரிடம் பேசியிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் ராஜகோபாலை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முத்துகிருஷ்ணன் அவரது மனைவியிடம் விவாகரத்து பெறுவதற்காக பெண் வக்கீலை பார்க்க அடிக்கடி வந்த போது அவருடன் முத்துகிருஷ்ணனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சந்திப்பதற்காக அடிக்கடி வந்தார் ஏற்கெனவே ராஜகோபாலுக்கும், பெண் வக்கீலுக்கும் தொடர்பு இருந்த நிலையில் முத்துகிருஷ்ணன் அவரிடம் நெருக்கம் காட்டியது ராஜகோபாலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து முத்துகிருஷ்ணனை அவர் கண்டித்தார். இருப்பினும் முத்துகிருஷ்ணன் அவருடனான தொடர்பை துண்டிக்கவில்லை.
இது தொடர்பாக மே 19ம் தேதி முத்துகிருஷ்ணனுக்கும், டிரைவர் ராஜகோபாலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முத்துகிருஷ்ணன் ராஜகோபாலை தாக்கினார். இதையடுத்து ராஜகோபால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கடந்த மே 22ம் தேதி முத்துகிருஷ்ணன் தனது காரில் நெல்லைக்கு வந்தார். இதையறிந்த ராஜகோபால் தனது கூட்டாளிகள் இசக்கிமுத்து, சிவா, சுரேஷ் ஆகிய 3 பேருடனும் பாளையங்கோட்டை சட்டக் கல்லூரி அருகே வரும் ேபாது 4 பேரும் சேர்ந்து முத்துகிருஷ்ணனை வழிமறித்து அதே காரில் கடத்திச் சென்றனர். பின்னர் அவரை கொலை செய்து உடலை சாக்குமூடையில் கட்டி ராஜவல்லிபுரம் அருகே ஒரு கல்குவாரியில் காரோடு சேர்த்து மூழ்கடித்துள்ளனர். அதன்பின்னர் 4 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர்.
போலீசார் கல்குவாரியிலிருந்து முத்துகிருஷ்ணன் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ராட்ச கிரேன் வரவழைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் கொலை செய்யப்பட்ட முத்துகிருஷ்ணன் உடல் வெளியே எடுக்கப்படுகிறது.
பெண் விவகாரத்தில் தூத்துக்குடி சாப்ட்வேர் இன்ஜினியர் கல்வெட்டான்குழியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், நெல்லை, தூத்துக்குடி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் வக்கீல் எங்கே?
கொலையாளி ராஜகோபால் பெண் வக்கீலுக்கு படிப்புச் செலவு மற்றும் குடும்ப செலவுகளுக்காக ஏராளமான பணம் கொடுத்துள்ளார். முத்துகிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்ட பின்னர் ராஜகோபாலுடன் தொடர்பை பெண் வக்கீல் குறைத்துக் கொண்டார். இதுவே கொலைக்கு காரணமாகும். இதற்கிடையில் முத்துகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட பின்னர் அந்த பெண் வக்கீலை பற்றி எந்த தகவலும் இல்லை. அவர் எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.