மத்திய அரசுடன் உறவை வலுப்படுத்த அனைத்து மாநில தலைமை செயலர்களுடன் மோடி ஆலோசனை
7/10/2025 3:22:22 PM
புதுடெல்லி : மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில், அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மாநாடு இன்று காலை விஞ்ஞாபவனில் நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கி மாலை வரை பிரதமர் மோடி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளுடன் மோடி ஆலோசிக்கிறார். இந்த மாநாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை, ஜிஎஸ்டி அமல்படுத்தியது தொடர்பான தாக்கங்கள், மானிய விவகாரம், விவசாயம், ஊட்டச்சத்து மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களை ஊக்குவிப்பது, மின்சார பயன்பாடு அதிகரிப்பு, பாதுகாப்பான குடிநீர், கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
மேலும் மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அரசுகளுக்கு உள்ள முட்டுக்கட்டைகள் குறித்த குறைகளையும் கேட்டறிகிறார். இதையடுத்து மத்திய அரசின் திட்டங்களை விரைவுபடுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட உள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன்னதாகவே மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். இதையொட்டி மத்திய அரசின் திட்டங்களை மாநிலங்களில் அமல்படுத்துவதை விரைவுபடுத்தும் வகையில் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக நிதி கமிஷனின் பரிந்துரையின் படி, மாநிலங்களின் நிதி நிலவரம் குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேவ்ராய் அறிக்கை தாக்கல் செய்தார். இதையொட்டி பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்த பின் மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் சிறப்பு திட்டங்கள் குறித்து மாநில தலைமை செயலாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
மேலும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மாநிலங்கள், மந்தமாக செயல்பட்ட மாநில அரசுகள் குறித்த தர வரிசை அறிக்கையை நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்த விவாதமும் நடைபெறும் என தெரிகிறது. இந்த மாநாட்டில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தின் தலைமை செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகம் சார்பில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கலந்து கொண்டார். மேலும் மத்திய அரசின் நிதி மற்றும் உள்துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.