இந்தியாவின் முதல் புராதன நகரம்
7/10/2025 3:20:23 PM
ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், புராதன சிறப்பு மிக்க நகராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெறுகிறது. மேலும் பாரீஸ், வியன்னா, பிரசல்ஸ், ரோம், எடின்பர்க் ஆகிய பிரபல நகரங்களுடன் புராதன பட்டியலில் ஆமதாபாத்தும் இணைந்து உள்ளது.
600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆமதாபாத் நகரம், சுல்தான் அகமது ஷாவால் உருவாக்கப்பட்டது ஆகும். இதுகுறித்து, பாரம்பரிய சின்னங்களை ஆய்வு செய்யும் டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சோகைல் ஹாஸ்மி கூறும்போது, “இந்தியாவின் பல்வேறு நகரங்கள் தங்களுடைய பாரம்பரியத்தை பேணி வருகின்றன. தற்போது ஆமதாபாத் புராதன நகராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் இனி டெல்லி, மும்பை, பாட்னா, அலகாபாத், மதுரை ஆகிய நகரங்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகும்” என்றார்.