அனைத்துக்கட்சி தலைவர்கள் கதிராமங்கலத்தில் முற்றுகை : போலீஸ் குவிப்பு; பதற்றம்
7/10/2025 3:18:42 PM
கும்பகோணம் : கடந்த 10 நாட்களாக போராடி வரும் கதிராமங்கலம் கிராமத்தை அனைத்துக் கட்சித் தலைவர்கள் இன்று முற்றுகையிட்டுள்ளனர். போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு குடிநீர், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். எனவே எண்ணெய் நிறுவனம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராடி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் நடந்த போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தி 10 பேரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கைது செய்தவர்களை விடுதலை செய்யக்கோரி கதிராமங்கலத்தில் இன்று 10வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம் என பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கதிராமங்கலத்தில் ஆட்டோ, வேன் போன்ற வாடகை வாகனங்களும் இயக்கப்படவில்லை. பள்ளி மாணவ, மாணவிகளும் ஒரு நாள் போராட்டம் நடத்தினர். சிறையில் அடைக்கப்பட்டவர்களை நிபந்தனையின்றி ஜூலை 9ம் தேதிக்குள் விடுவிக்காவிட்டால், 10ம் தேதி(இன்று ) கதிராமங்கலத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தனர்.
இதையொட்டி தஞ்சாவூர் டிஐஜி லோகநாதன், எஸ்பி மகேஷ் தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வாகனங்களும் ஏராளமாக வந்துள்ளது. எண்ணெய் கிணறுகள் உள்ள பகுதிக்குள் யாரும் செல்லமுடியாதபடி அதை சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். கதிராமங்கலத்தில் கடைகள் வழக்கம் போல இன்று 10வது நாளாக அடைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக நாகை மாவட்டம் குத்தாலத்திலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் கதிராமங்கலம் பகுதிகளில் பதற்ற நிலை காணப்படுகிறது.
கதிராமங்கலத்தின் உண்மை நிலை அறிந்து அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று அனைத்து கட்சி தலைவர்களும் கதிராமங்கலம் வருவதற்காக அருகில் உள்ள சிவபுரம் பஸ் நிலையத்தில் ஒன்று கூடினர். திமுக சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம், கோவி செழியன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் கதிராமங்கலம் புறப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் அந்த கட்சி நிர்வாகிகள், மார்க்சிய கம்யூனிஸ்ட் விவசாய சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் இந்த ஊர்வலகத்தில் கலந்து கொண்டனர்.
அதோடு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களும் தொண்டர்களுடன் கூடினர். காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன், விடுதலை தமிழ்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் மற்றும் அனைத்து கட்சியினரும் கூடினர். பின்னர் அங்கிருந்து சுமார் 2 கி.மீ.தூரம் நடந்தே சென்றனர். பின்னர் கதிராமங்கலம் நோக்கி சென்றனர். அங்கு அய்யனார் கோவில் திடலில் கூடியுள்ள கதிராமங்கலம் மக்களைச் சந்தித்து அவர்களிடம் இதுவரை நடந்த பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தனர். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கதிராமங்கலத்தில் திரண்டுள்ளதால், இன்று பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.