துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்று மாலை ஆலோசனை டெல்லியில் பாஜ உயர்மட்ட குழு கூட்டம்
7/9/2025 2:15:21 PM
புதுடெல்லி: டெல்லியில் இன்று மாலை துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக பாஜ உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஜனாதிபதி தேர்தல் வருகிற 17ம் தேதி நடைபெறுகிறது. 20ம் தேதி முடிவுகள் வெளியாகும். அதே போல் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பதவிக்காலம் ஆகஸ்ட் 10ல் முடிவடைவதால் அதற்கு முன்னதாக 5ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழலில் ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளராக பீகார் கவர்னர் ராம் நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில் பிரதமர் மோடி, அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இன்று நாடு திரும்பியுள்ளார். பிரதமர் மோடி நாடு திரும்பிய பிறகே துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஏற்கனவே பாஜ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மோடி டெல்லி திரும்பியதையடுத்து பாஜ உயர்மட்ட தலைவர்கள் குழு கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளராக யார் வருவார் என்ற கணிப்புகளை தகர்த்து ராம் நாத் கோவிந்தை வேட்பாளராக பாஜ அறிவித்தது. அதே போல் தற்போது துணை ஜனாதிபதி தேர்தலிலும் பாஜ சார்பில் யார் போட்டியிட கூடும் என்ற ஊகங்கள் வெளியாகி உள்ளன. சுஷ்மா சுவராஜ், கல்ராஜ் மிஸ்ரா, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், வெங்கய்யா நாயுடு ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக வெங்கய்யா நாயுடு அல்லது பாதல் ஆகிய இருவரில் ஒருவரை பாஜ அறிவிக்கலாம் என்ற கணிப்புகள் உள்ளன. ஆனால் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பாஜ உயர் மட்ட குழுவில் ஆலோசிக்கப்பட்டு இறுதி அறிவிப்பை பிரதமர் மோடி, அமித்ஷா இன்று அல்லது நாளை வெளியிடுவார் என தெரிகிறது. எனவே துணை ஜனாதிபதியாக பாஜ யாரை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது எதிர்கட்சிகள் சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்து நாளை மறுநாள் சோனியா தலைமையில் எதிர்கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசிக்க உள்ளனர். எனவே ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்ததை போலவே எதிர்கட்சிகளுக்கு முன்னதாகவே பாஜ தனது வேட்பாளரை இன்று அல்லது நாளை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்த அளவில் நாடாளுமன்ற இரு அவைகளின் எம்பிக்கள் மட்டுமே வாக்களிப்பர். எனவே இரு அவைகளிலும் மொத்தமாக உள்ள 790 எம்பிக்களில் பாஜவுக்கு அதிக பலம் உள்ளது. எனவே துணை ஜனாதிபதி தேர்தலிலும் பாஜ வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலையொட்டி எம்பிக்கள் டெல்லி வரவேண்டியுள்ளதால் அதையொட்டி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 17ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடக்கிறது.
மேலும் அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனியில் ஜி20 நாடுகளின் மாநாடுகளில் கலந்து கொண்டு விட்டு பிரதமர் நாடு திரும்பியுள்ளார். அங்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான உறவு குறித்து பிரதமர் மோடி பேசினார். எனவே இந்த முக்கிய அம்சங்கள் குறித்து பாஜ உயர்மட்ட குழு கூட்டத்தில் இன்று விவாதிக்கப்படும் என தெரிகிறது. தனது வெளிநாட்டு பயணம் குறித்து பாஜ தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி விளக்கி பேசுகிறார் என பாஜ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ள நிலவரம் குறித்தும் உயர்மட்ட தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்த பரிசீலனையும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், பற்றி எரியும் காஷ்மீர், மேற்கு வங்க கலவரம், நாடு முழுவதும் அதிகரித்துள்ள பசு பாதுகாவலர்களின் சட்ட விரோத கொலைகள், ஜிஎஸ்டி, சிக்கிம் எல்லையில் சீன அத்துமீறல் உள்ளிட்டவை குறித்து எதிர்கட்சிகள் பிரச்னை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவற்றை எதிர்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் இந்த கூட்டத்தின் போது ஆலோசிக்கப்பட உள்ளது. டெல்லியில் இன்று மாலை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பாஜ மூத்த தலைவர்களான அத்வானி, ஜோஷி, அருண் ஜெட்லி, ராஜ்நாத், சுஷ்மா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.