எதிர்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?
7/9/2025 2:14:06 PM
புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிட போகும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்த வருகிற 11ம் தேதி டெல்லி வரும்படி எதிர்கட்சி தலைவர்களுக்கு சோனியா அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவதையொட்டி வருகிற 17ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் 20ம் தேதி வெளியாகும். இந்த சூழலில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே துணை ஜனாதிபதிக்கான தேர்தலும் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற இரு அவைகளின் எம்பிக்கள் மட்டுமே வாக்களிக்க உள்ளதால், அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 4ம் தேதி தொடங்கி 18ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த சூழலில் ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி கட்சிகள் சார்பில் பீகார் கவர்னர் ராம் நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் சார்பில் மீராகுமாரும் போட்டியில் உள்ளன. அதே நேரத்தில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும் மற்றும் எதிர்கட்சி தரப்பு வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் கடந்த வாரம் முழுவதும் வெளிநாட்டு சுற்றுபயணத்தில் இருந்தார். இன்று டெல்லி திரும்பியுள்ளார். எனவே அவரது வெளிநாட்டு பயணத்திற்கு பிறகு இன்று அல்லது நாளை பாஜ உயர்மட்ட குழு கூடி துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கும் என தெரிகிறது. அதே போல் எதிர்கட்சிகள் சார்பில் வேட்பாளரை தேர்வு செய்ய சோனியா தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன. இதற்காக வருகிற 11ம் தேதி எதிர்கட்சி தலைவர்களை சோனியா டெல்லிக்கு வர அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் ராகுல், சிபிஎம் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், என்சிபி தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் சந்திர மிஸ்ரா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜ வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் எதிர்கட்சிகள் அணியில் இருந்து நிதிஷ் தலைமையிலான ஜேடியூ வெளியேறியுள்ளது. இருந்த போதிலும் நிதிஷ் தரப்பில் இருந்து மூத்த தலைவர் ஒருவர் எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.