தம்பதியை கட்டிப்போட்டு 40 பவுன் நகை கொள்ளை
7/7/2025 2:54:24 PM
ஆத்தூர்: வீட்டில் தனியாக இருந்த தம்பதியை கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த 40 பவுன் நகை, 7 லட்சம் ரொக்கம், ₹8 லட்சம் மதிப்பிலான புதிய காரை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த மணிவிழுந்தான் சக்திநகரை சேர்ந்தவர் பழனிவேல் (59). மரவள்ளி கிழங்கு புரோக்கர். இவருடைய மனைவி பத்மாவதி (51). இவர்களுக்கு, ஷ்யாம்சுந்தர் (21) என்ற மகன் உள்ளார். சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே பழனிவேலின் வீடு உள்ளது. கணவன், மனைவி இருவர் மட்டும் வீட்டில் உள்ளனர். காவலாளிகள் யாரும் இல்லை. நேற்று இரவு தம்பதியினர் சாப்பிட்டு விட்டு தூங்கச்சென்றனர். இந்நிலையில் அதிகாலை 1.30 மணியளவில் 6 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்கு வந்துள்ளது. அதில், இருவர் வெளியில் காவலுக்கு நிற்க, மீதமுள்ள 4 பேர் வீட்டினுள் சென்றனர்.
அங்கு, தூங்கிக்கொண்டிருந்த பழனிவேலையும், பத்மாவதியையும் தட்டி எழுப்பி கத்தியை காட்டி மிரட்டினர். அரைகால் டவுசர், சிகப்பு பனியன், மங்கிகுல்லா அணிந்திருந்த அவர்களை பார்த்து இருவரும் அதிர்ச்சியடைந்தனர். தம்பதியினரை தாக்கிய கொள்ளையர்கள், ஒயரை கொண்டு கைகளை கட்டிப்போட்டனர்.
அதன்பின், பீரோ மற்றும் லாக்கர் சாவியை எடுத்து அவர்கள் மூலமாகவே திறக்க வைத்தனர். பீரோவில் இருந்த நகை, பத்மாவதியின் தாலிக்கொடி உள்பட 40 பவுனையும், ₹7 லட்சம் ரொக்கத்தையும் வாங்கினர். பின், அங்கிருந்த தலையணையில் இருந்து உறையை கழற்றி அதில் நகையையும், பணத்தையும் போட்டுக்கொண்டனர். சத்தம் போட்டாலோ, நாங்கள் வெளியே சென்றபின் போலீசாருக்கு தெரிவித்தாலோ, வௌியே எங்களுடைய ஆட்கள் உள்ளனர்.
உங்கள் இருவரையும் கொன்று விடுவார்கள் என மிரட்டல் விடுத்தனர். பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த கொள்ளையர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ₹8 லட்சம் மதிப்பிலான புதிய காரின் சாவியை தம்பதியரிடம் வாங்கி அதையும் எடுத்து சென்றனர். ஒரு மணி நேரம் வீட்டிற்குள் இருந்தபடியே தங்களுடைய கொள்ளையை எளிதாக நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். கொள்ளையர்கள் சென்ற பின் 3 மணி நேரத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் இருவரும் தவித்தனர். பின்னர், ஜன்னல் வழியாக அக்கம், பக்கத்தினரை அழைத்து கைகட்டுகளை அவிழ்த்து வெளியேறினர். அதைதொடர்ந்து, தலைவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆத்தூர் டிஎஸ்பி பொன் கார்த்திக்குமார் தலைமையில் வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கைரேகை பதியாதவாறு, வீட்டில் இருந்தவர்களை கொண்டே அந்த கும்பல் பணம், நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
6 தனிப்படை அமைப்பு
மாவட்ட எஸ்பி ராஜன் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொள்ளையர்களை பிடிக்க டிஎஸ்பி பொன்கார்த்திக்குமார் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் உள்ள டோல்கேட்டுகளில், கொள்ளையர்கள் சென்ற கார் கடந்து சென்றதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
வீட்டினுள் நுழைந்தது எப்படி?
கொள்ளை நடந்த கிழங்கு புரோக்கர் வீட்டில் காவலாளிகள், சிசிடிவி கேமரா இல்லாததை கொள்ளை கும்பல் தெரிந்து கொண்டது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி என்பதால் எளிதாக சென்று விடலாம் என முடிவு செய்துள்ளது. அதன்படி, அதிகாலை 1.30 மணியளவில் காம்பவுண்ட் சுவரை தாண்டி உள்ளே வந்த கும்பல், அங்கிருந்த ஏணி வழியாக மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். பின், அங்குள்ள பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதன்பின், பழனிவேல், பத்மாவதி இருக்கும் அறைக்கு சென்று இருவரையும் தாக்கி சுலபமாக நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர். 4 பேர் உள்ளே கொள்ளையில் ஈடுபட, 2 பேர் வெளியே காவலுக்கு நின்றுள்ளனர்.
கொள்ளையர்கள் முதல் உதவி
தேசிய நெடுஞ்சாலை பகுதி என்பதால் எப்போதும் அலார்ட்டாக இருக்கும் பழனிவேல் நேற்று அயர்ந்து தூங்கிவிட்டார். கொள்ளை கும்பல் மிரட்டலின்போது, அவருக்கு ரத்தஅழுத்தம் குறைந்தது. அந்த கும்பலே, மாத்திரை, வெந்நீர் கொடுத்து முதலுதவி செய்துள்ளனர். மேலும், அவர்கள் தமிழிலேயே பேசியுள்ளனர். நாங்கள் சென்னை சென்றடையும் வரையில், போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். கொள்ளையர்களுக்கு பணிந்து அவர்கள் சொன்னதை கேட்டு நகைகளை கொடுத்ததால் தம்பதியருக்கு எவ்வித காயமும் இல்லை. பழனிவேலுக்கு நெருக்கமானவர்கள் மூலமே இந்த கொள்ளை நடந்திருக்கலாம், வீட்டை பற்றி நன்கு தெரிந்தவர்கள் தான் எளிதாக நுழைந்து காரியத்தை முடித்துள்ளனர் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.