தமிழகம், புதுவை, கேரளா எம்பி, எம்எல்ஏக்களிடம் ராம்நாத் கோவிந்த் சென்னையில் ஆதரவு திரட்டினார் : மீராகுமார் மாலையில் சந்திக்கிறார்
7/1/2025 3:34:14 PM
சென்னை : பாஜ ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை சென்னை வந்தார். தமிழகம், புதுவை, கேரளா எம்பி, எல்எல்ஏக்களிடம் அவர் ஆதரவு திரட்டினார். அதேபோல, எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் இன்று மாலை கூட்டணிக் கட்சி எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜ சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் நாடாளுன்ற மக்களை முன்னாள் தலைவர் மீராகுமார் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து ராம்நாத், மீராகுமார் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ராம்நாத் மற்றும் மீராகுமார் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். ராம்நாத்துக்கு தமிழகத்தில் எடப்பாடி அணி மற்றும் ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர். திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் மீராகுமாருக்கு ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில எம்பி, எம்எல்ஏக்களிடம் ஆதரவு கேட்பதற்காக பாஜ வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அவருடன் மத்திய மந்திரிகள் ஜெ.பி.நட்டா, பாஜ தேசிய செயலாளர் முரளிதர் ராவ் ஆகியோர் உடன் வந்தனர்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து நேராக கிண்டியில் உள்ள ஓட்டலுக்குச் சென்றார். அங்கு பிற்பகல் 12.30 மணிக்கு ராம்நாத் புதுவை மாநில என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, கேரளா எம்பி ராஜகோபாலையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். மாலை 3.30 மணிக்கு சென்னை, ஆழ்வார்ப்பேட்டை அருகே கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையம் சென்றார். அங்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கேட்டார். தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கம் செல்லும் ராம்நாத் கோவிந்த், அங்கு முதல்வர் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து, தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்கிறார். இதையடுத்து, இன்று இரவு 8 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
எதிர்கட்சிகள் வேட்பாளர் மீராகுமார் இன்று மாலை 5 மணிக்கு சென்னை விமானநிலையம் வருகிறார். அவருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்று அழைத்து செல்கின்றனர்.இரவு 7 மணிக்கு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எல்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருகிறார். பின்னர் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இரவு 8 மணிக்கு மீராகுமார் கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரிக்கிறார்.