30 பேர் பலியான வழக்கு ரூ.1.78 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவு : 17 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
6/30/2017 3:19:43 PM
சேலம் : சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் என்ற இடத்தில் கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி ஈரோட்டில் இருந்து சேலம் வந்த அரசு பேருந்து மீது எதிரில் சென்ற டிப்பர் லாரி மோதியது. இதில் டிப்பர் லாரியின் டேங்கர் வெடித்து தீப்பிடித்ததில் பஸ்சில் பயணம் செய்த 30 பயணிகள் இறந்தனர். மேலும் 32 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் பஸ் டிரைவர் ராஜாவும் இறந்துபோனார். சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் நஷ்டஈடு கேட்டு சேலம் மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி பாலசுப்பிரமணியம் நேற்று தீர்ப்பு கூறினார். இறந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் என 62 பேருக்கு ரூ.1கோடியே 78 லட்சத்து 49 ஆயிரத்து 899 ரூபாய் நஷ்டஈடாக வழங்க சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். இதனை 7 சதவீத வட்டியுடன் கொடுக்கவும் தீர்ப்பு கூறினார். இந்த விபத்தில் இறந்துபோன ஈரோடு மாவட்டம் உதயம்பாளையத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தனுக்கு(55) ரூ.16லட்சத்து, 17ஆயிரத்து 526 ரூபாய் அதிகபட்ச இழப்பீடாகும். குறைந்த பட்சமாக காயம் அடைந்த பெண் ஒருவருக்கு ரூ.7ஆயிரம் நஷ்டஈடு வழங்கப்பட்டது.