சைதை தொகுதி திமுக சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் சிறப்பு திட்டம் : மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
6/30/2017 3:17:11 PM
சென்னை : சென்னையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் சிறப்பு திட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து திமுக சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: சைதை தொகுதியில் வசிக்கும் மக்கள் அவரவர் பிறந்தநாளில் அவர்கள் வசிக்கும் தெருவில் நன்கு வளர்ந்த மரக்கன்றுகளை நட்டுத்தரும் சிறப்புத் திட்டம் நாளை முதல் தொடங்கப்படுகிறது. சென்னையில் 6.5 சதவீதமாக இருந்த பசுமை பகுதி சமீபத்தில் ஏற்பட்ட வர்தா புயலால் 4.5 சதவீதமாக குறைந்துவிட்டது. சென்னையில் பசுமையை மீட்டெடுக்கும் வகையில் மேற்கண்ட சிறப்பு திட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா நிறுவனர் எம்.பி.நிர்மல், மரவங்கி அமைப்பு நிறுவனர் முல்லைவனம், நடிகர்கள் மயில்சாமி, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இத்திட்டத்தின் கீழ் அதிக உறுதித்தன்மை வாய்ந்த வேப்பமரம், புங்கை, பூவரசம், அத்தி, நாவல் உள்ளிட்ட மரங்கள் நடப்படும். ஒருவருட காலம் நல்ல முறையில் தொடர்ந்து பராமரிப்பவர்களுக்கு பசுமை ‘’பாதுகாவலர் விருது’’ வழங்கப்படும். ஒரு வருடத்தில் ஒரு லட்சம் மரம் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள், சைதை தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை(ஜோன்ஸ் சாலை, மாந்தோப்பு, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் அருகில், சைதாப்பேட்டை, சென்னை-15, செல்போன்-9566209124. 9566209125) நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டால் மரக்கன்று நட்டுத்தரப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.