பட்டாபிராமில் அதிகாரி மகள் மீட்பு : கடத்தலுக்கு உதவிய மேலும் 3 பேர் கைது
6/29/2017 3:35:58 PM
ஆவடி : ஆவடியை அடுத்த பட்டாபிராம், சத்திரம், பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (55). இவர், இந்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான ஆவடி டேங்க் பேக்டரியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மினி (48). இவர் ஆவடியில் உள்ள விமான படைக்கு சொந்தமான பள்ளி ஆசிரியர். இவர்களது ஒரே மகள் சினேகா (26). எம்.காம் பட்டதாரி. இவருக்கு வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி காலை பெற்றோர் வேலைக்கு கிளம்பி சென்றதும் வீட்டில் தனது பாட்டி விஜயலட்சுமியுடன் சினேகா இருந்துள்ளார். அப்போது ஒரு காரில் வந்த மர்மக் கும்பல், பாட்டி விஜயலட்சுமியை கயிற்றால் கட்டி போட்டனர். பின்னர் சினேகாவை காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து பட்டாபிராம் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். முதல்கட்ட விசாரணையில், சினேகாவும் பட்டாபிராம், பாரதி நகரை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான சாதிக்பாட்சா (38) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததும், சாதிக்பாட்சாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பது தெரிந்ததும் சினேகா காதலை முறித்து கொண்டுள்ளார்.
இதையடுத்து சினேகாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதை கேள்விப்பட்டதும் சாதிக்பாட்சா காரில் கடத்தி சென்றிருக்கலாம் எனத் தெரியவந்தது. இதையடுத்து சினேகாவை காரில் கடத்திய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஆந்திர மாநிலம், நெல்லூரில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சினேகாவை தனிப்படை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக சாதிக்பாட்சா என்பவரை கைது செய்து, அவரது காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சாதிக்பாட்சாவின் கடத்தலுக்கு உதவிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சாதிக்பாட்சாவின் கடத்தலுக்கு உதவியாக இருந்து தலைமறைவான ஆந்திர மாநிலம், நெல்லூர், சென்னாரெட்டி பாளையத்தை சேர்ந்த ஏசய்யா (25), ரமேஷ் (28), ரவிக்குமார் (32) ஆகிய 3 பேரையும் நேற்று மாலை பட்டாபிராம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நேற்றிரவு திருவள்ளூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.