உத்திரமேரூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பை மக்கள் தடுத்ததால் பரபரப்பு
6/28/2017 3:47:36 PM
உத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த வளத்தோடு கிராமத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் தரிசு நிலம் (கிராம நத்தம்) உள்ளது. இந்த நிலத்தை கோயில் கட்டுவதற்காக பொதுமக்கள் பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். கோயில் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் அந்த நிலத்தில் புற்கள், செடி, கொடி வளர்ந்து பயன்பாடற்று காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த சிலர், ‘இந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது’ என்று கூறி ஜேசிபி இந்திரம் மூலம் செடி கொடிகளை அகற்றி ஆக்கிரமிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அதே கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தினர். மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘நிலங்களை அளந்து, கிராமத்திற்கு சொந்தமான நிலம் என்றால் ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், ‘இந்த இடம் எங்களது முன்னோர்கள் கோயில் கட்டுவதற்காகவும், வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கும் என ஒதுக்கப்பட்ட இடமாகும். அந்த இடத்தை ஆக்கிரமித்ததால் தடுத்து நிறுத்தினோம். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.