தனியார் பாலில் கலப்படம் பிரதமர் மோடியிடம் புகார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி
6/28/2017 3:46:03 PM
சென்னை : 2 தனியார் பாலில் கலப்படம் குறித்து பிரதமரிடம் புகார் செய்யப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள சில தனியார் பாலில் ரசாயன கலவை கலந்திருப்பதாக நான் சில மாதங்களாக கூறி வருகிறேன். இதனை சிலர் கிண்டல் கேலியும் செய்து வந்தனர். பாலில் ரசாயன கலவை இருப்பதாக ஆய்வகம் மூலமாக ரிப்போர்ட்டை சமர்ப்பித்தால் தனியார் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியே தனியார் நிறுவனங்களுக்கு அந்த பாலை அனுப்பினால் எங்களுக்கு முன்னர் அவர்கள் அங்கு சென்று ரிப்போர்ட்டை அவர்களுக்கு சாதமாக்கி கொள்கின்றனர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் ஒருவர் மூலமாக ஒரு பத்திரிகை ஒன்றின் வாயிலாக தனியார் பால் பவுடரை ஆய்வுக்கு அனுப்பினோம். அதில் பிரபல நெஸ்லேவின் எவரிடே, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களில் பால் பவுடரில் ரசாயன கலவை கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் காஸ்மோடிக் சோடா, பிளீச்சிங் பவுடர் கலக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு ஏதோ சாதாரண ஆய்வகத்தில் நடத்தவில்லை. மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஒரு தனியார் ஆய்வகத்தில் நடத்தப்பட்டது.
கெட்டுபோன பாலில் அமில தன்மையை குறைவாக்க காஸ்டிக் சோடாவை பயன்படுத்தி அதனை பால் பவுடராக ஆக்குகின்றனர். இதனால், இந்த பால் பவுடரை சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு, காலரா போன்ற வியாதிகள் ஏற்படும். எனவே, பாலில் ரசாயன கலவையை கலந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இருந்தாலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இது போன்ற ரசாய கலவையை கலக்கும் நிறுவனங்களின் பால் சார்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டாம். ரசாயன கலவை பாலில் கலப்பது என்பது சில தனியார் நிறுவனங்கள் தான் செய்கின்றன. அவர்களுடைய பொருட்களின் மாதிரிகள் தான் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டது. இன்னும் சில நிறுவனங்கள் ஆய்வக அறிக்கை வர வேண்டியது உள்ளது. அது வந்ததும் அந்த நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் சோதனையில் ஈடுபட்டு வருவதை கண்டு சில தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயன கலவை கலக்க யோசிக்கிறார்கள். அதற்கு பதிலாக பால் பவுடரில் கலக்க தொடங்கியுள்ளனர்.
இந்த பால் பவுடரை விரும்பி உண்கிறவர்களுக்கு உடனடியாக பாதிப்பு எதுவும் ஏற்படாது. சைலன்ட் கில்லர் என்று சொல்வார்களே அது போல போல படிப்படியாக தான் ஆட்களை கொல்லும். அதாவது, கிட்னி பிரச்னை, லிவர் பிரச்னை, ஹார்ட் பிரச்னை, சுகர் பிரச்னை, அல்சர் பிரச்னை என்று ஒவ்வொரு ேநாயாக வரும். எனவே, இது போன்ற நிறுவனங்களின் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். ஆவின் பால், பால் பவுடர், தயிர் உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்த போது தரம் வாய்ந்தது என்று தெரியவந்துள்ளது. இதனையும் மத்திய அரசு சான்றிதழ் பெற்ற ஆய்வகம் தான் தெரிவித்துள்ளது. ஆவின் பால் தாய் பாலுக்கு நிகரானது. அதனை பொதுமக்கள் வாங்கி பருகுங்கள். ரசாயன கலவை தொடர்பாக கோர்ட்டில் அறிக்கை அளித்தால், கோர்ட்டில் ரூ.1500 அபராதம் செலுத்தி நிறுவனங்கள் தப்பித்து விடுகின்றன. முதல்வரிடம் பேசி அவர்களுக்கு தண்டனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற ரசாயன கலவை கலக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் எனக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எனக்கு இது ேபான்ற நிறுவனங்கள் தடை செய்ய அதிகாரம் இருந்தால் உடனே அந்த நிறுவனங்களை தடை செய்திருப்பேன். ரசாயனம் கலப்பு தொடர்பாக இந்த அறிக்கை பிரதமருக்கு இமெயில் மூலம் அனுப்பப்படும். எனது குடும்பத்தில் 2 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். இது போன்ற பாலை பருகியதால் தான் அவர்கள் இறந்தனர். அதன் வலி எனக்கு தெரியும். 10 வருடம் எனக்கு அந்த வலியின் தாக்கம் இருந்தது. என்னை ேபால யாரும் பாதிக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். எனக்கு பால் வளத்துறை அமைச்சர் பதவி கிடைத்து 6 மாதங்கள் ஆகிறது. அதில் 3 மாதங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது கழிந்து விட்டது.
மீதியிருந்த 3 மாதங்களின் தான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். இது போன்ற நடவடிக்கையால் என்னை அமைச்சரவையில் இருந்து மாற்றினாலும் பரவாயில்லை. நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதால் எனக்கு நள்ளிரவு 12 மணிக்கு போன் மூலம் மிரட்டல் வருகிறது. அதுவும் வெளிநாட்டு நம்பரில் இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக அமைச்சர் ஒருவரே தனியார் பாலில் கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.